சனி, 27 ஜூலை, 2019

தொல்தமிழர் அறிவியல் – 34: 8. மனநலம்

தொல்தமிழர் அறிவியல் – 34: 8. மனநலம்


மன உணர்வு
மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.
இத்தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை வகுத்த பேராசிரியர்-
                   “ பிறப்பு என்றதனால் குரங்கு முதலாகிய விலங்கினுள் அறிவுடையன எனப்படும் மன உணர்வு உடையன உளவாயின் அவையும் ஈண்டு ஆறறிவுயிராய் அடங்கும் என்பது தாமே எனப் பிரித்துக் கூறினமையான் நல்லறிவுடையார் என்றற்குச் சிறந்தார் என்பதும் கொள்க ,” என்றார்.
                       ஈண்டுத் தொல்காப்பியர் கூறியவழி நோக்கின் மனிதன் விலங்காவதும் ; விலங்கு , மனித நிலைக்கு உயர்வதும் தெற்றென விளங்குவதை அறியலாம்.
இக்கூறுபாடு மனத்தை அடிப்படையாகக் கொண்டு, அஃதாவது அறிவை மனம் என்றதற்குச் சான்றாம்.
                மனம் பற்றிய அறிவியல் சிந்தனை தமிழர்களிடத்தில் தொன்றுதொட்டு வளர்ந்து வந்திருக்கிறது. நம்முன்னோர் கருத்துக்களைத்தாம் பிற்கால அறிவியல் அறிஞர்கள் பகுப்பாய்வு செய்து மெய்ப்பித்துள்ளனர்.
மனநலம்
                      மனநலம் உடையவனாக மனிதன் வாழ வேண்டும் என்று கருதிய வள்ளுவர் மனத்தின் இயல்புகளைப் பகுத்தறிவோடு பல இடங்களில் விளக்கியுள்ளார். உலகியலோடு ஒத்து வாழ விரும்பும் மனிதன் மனத்தூய்மை உடையவனாக  இருத்தல் வேண்டும். சிற்றினம் சேராது தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வதில் இமைப்பொழுதும் சோராதிருக்க வேண்டும். மனமாசு மனிதனின் உடலையும் உள்ளத்தையும் கெடுத்துவிடும். மனமாசு பல நோய்களைத் தோற்றுவிப்பதோடு சில நோய்களைக் குணப்படுத்த முடியாமலும் செய்துவிடுகிறது எனபது வள்ளுவர் அறிவியல். இன்றைய உளவியல் அறிவியல் கூறும் உண்மையும் இதுதானே.
                தொல்காப்பியரும் திருவள்ளுவரும்  ஆராய்ந்த உளவியல் அறிவியல்வழி மெய்ப்பித்தவர் சிக்மண்ட் பிராய்டு.
சிக்மண்ட் பிராய்டு- ( 1856 – 1939)
                     பிராய்டு உளவியல் பகுப்பாய்வின் முன்னோடி. இவர் ஆஸ்திரியாவில் பிறந்து செக்கோஸ்லாவாக்கிய  நாட்டில் வளர்ந்து, தம் வாழ்நாள் முழுதும் உளவியல் ஆய்விற்காகப் பாடுபட்டவர். கனவுகளின் உட்பொருள் விளக்கம் ( The interpretation of Dreams) விலங்குணர்ச்சியும் பண்பாட்டுணர்ச்சியும்  ( Id – Ego)   ஆண், பெண் பாலுணர்ச்சிக்கு மூன்று விளக்கங்கள்(Three contribution to the theory of sex)  வாழ்க்கைஒரு தத்துவம்(A philosophy of life)  ஆகியன இவருடைய உலகப் புகழ்பெற்ற நூல்கள் ஆகும்.

               மனம் என்னும் சொல்  (Mind)  எண்ணம் (Intention) நினைவு  ( Memory) விருப்பம்   (Desire )  ஆகிய பொருள்களைக் குறித்து நிற்கிறது. ஆங்கிலத்தில் மனம் என்பதற்கான விளக்கம், மூளையில் உதிக்கும் பொருள்களைப் பற்றிய காரண காரியத் தொடர்பு ஆகும். ( The ability to be aware of things and to think and reason originating in the brain )
                 மனம் என்பதற்கு உளவியல் அறிஞர்கள் தரும் விளக்கமாவதுமனிதனின் அறிவுத்திறன் சார்ந்த உளவியல் குணங்களைக் குறிப்பது. அது தனிமனிதனின் இயல்பை ஒட்டி அமையும்
 ( Mind is the individual Psychological Characteristic of human intellectual abilities )
                    மனத்திற்கு ஓய்வு கிடையாது, அதில் சிந்தனை ஓட்டம்  நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. மனிதனின் சிந்தனைகள் அனைத்தும் வெளிப்படுவது கிடையாது. அதில் ஒரு பகுதி மூளையின் நினைவகத்தில் பதிந்து கிடக்கிறது. நினைவகத்திலிருந்து எப்போதாவது வெளிப்படும் எண்ணங்கள் கனவாக வரலாம் அல்லது நினைவகத்தில் தேங்கிக் கிடந்து நோயாக உருப்பெறலாம். பிராய்டு, மனிதர் தங்கள் மனத்தில் உண்டான தகாத எண்ணங்களை மனத்துள் அடக்க முயல்வதால் நோய்வாய்ப்படுகிறார்கள் என்று கூறுகிறார். -----தொடரும்.....

1 கருத்து:

  1. ப்ராய்டின் பல கருத்துகள் ஏற்றுக்கொள்ளக்கூடியனவாக இருக்கும், சில எதிர்மறையாக இருப்பினும்கூட.

    பதிலளிநீக்கு