சனி, 7 செப்டம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் – 76 : 24. கூந்தல்கழித்தல்

தொல்தமிழர் அறிவியல் – 76 :  24. கூந்தல்கழித்தல்


பண்டைத் தமிழர் தலை முடி

ஆணுக்கும் பெண்ணுக்கும் அழகுக்கு அழகூட்டுவது முடி (மயிர்) ; இது தலையை அலங்கரிக்கும் மணிமகுடம் ; மணி முடி சூட்டுதல். தலைமுடிக்குப் பல்வேறுவகையான ஒப்பனைகளைச் செய்து கொள்வது எல்லோரும் விரும்பி மேற்கொள்ளும் ஓர் ஒப்பற்ற கலையாகும். அழகு. தோற்றப் பொலிவு, தலைமை, பதவி, பொருளாதாரச் செல்வாக்கு, இறைத் தொண்டுநேர்த்திக்கடன், துறவு இன்னபிற காரணங்களால் தலை முடி பல்வேறு வடிவங்களையும் வண்ணங்களையும் பெறுகிறது.

ஆடவர் முடி

ஆடவர் தலையில் மாலை அணிதல்
கண்ணிஆடவர் தலையிற் சூடுதற்குரிய மாலை.
குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணி ” – சிறுபாண்.
மலை நாட்டுத்தலைவன் அவன் ; கொய்த இளந்தளிர் மாலை அணிந்தவன்.
கண்ணி கார்நறுங் கொன்றை காமர்” –பறநா.1.
சடைபின்னிய கூந்தல்,
சடையன்  - சிவன்

இறைவன் திருமுடிமேற் சூடப்படும் கண்ணி கார்காலத்து மலரும் நறிய கொன்றை மலர். சிவபெருமான் அடையாள மாலை என்பர்.

நன்றாய்ந்த நீள்நிமிர் சடை
முதுமுதல்வன் …… --புறநா.166

பெரிதும் ஆராயபட்ட மிக்க நீண்ட சடையினையுடைய முதிய இறைவனது.. (சிவபெருமான்)
கடுந்தெறற் செந்தீ வேட்டுப்
புறந்தாழ் புரிசடை புலர்த்துவோனே.. – புறநா.251: 6 - 7
மிக்க வெம்மையுடைய செந்தீயை வேட்டு முதுகின் கண்ணே தாழ்ந்த புரிந்த சடையைப் புலர்த்துவோன்.

தளிரொடு மிடைந்த காமரு கண்ணி
திரங்கு மரல் நாரில் பொலியச் சூடி----- மலைபடு.

ஒள்ளிய தளிர்களையுடைய யாமரத்தின் பூவையும் உலர்ந்த மரல் நாரில் தளிர்களோடு நெருங்கக் கட்டிய விருப்பத்தைத்தரும் கண்ணியை அழகுபெறச்சூடி…..

குடுமிஆண்மக்களது முடிந்த மயிர், உச்சிக் கொண்டை
எங்கோ வாழிய குடுமி …… -புறநா. 9

எம்முடைய வேந்தனாகிய குடுமி வாழ்வானாக.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதியைச் சிறப்பித்தது.
 சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளியைச் சிறப்பித்தது

கிண்கிணி களைந்த கால் ஒண்கழல் தொட்டுக்
 குடுமி களைந்து நுதல் வேம்பின் ஒண்தளிர்…… புறநா.77: 1 - 2

                      சதங்கை வாங்கப்பட்ட காலிலே ஒள்ளிய வீரக் கழலினைச் செறித்துக் குடுமி ஒழிக்கப்பட்ட சென்னிக்கண்ணே வேம்பினது ஒள்ளிய தளிரை நெடிய கொடியாகிய உழிஞைக் கொடியோடு சூடிசிறுவன் போர்க்களம் புகுந்தான்.

இன்றும் செருப்பறை கேட்டு விருபுற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிது விரித்துடீஇப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே --- புறநா.279: 7 - 11

பாறு மயிர்- விரிந்த மயிர்; வெள்ளிய ஆடை உடுத்தி, விரிந்து கிடந்த மயிரில் எண்ணெய் தடவி, போருக்கு அனுப்பினாள்.

    மேற்காணும் சான்றுகளின்படி, பண்டைய தமிழர் போர்க்கோலம் பூணும் காலை, குடுமியைக் களைந்து விடுதலும் களமாடும் வீரர்தம் முடி கலைதல் தவிர்க்கப்படக் குடுமியை நீவி அலங்கரித்து அனுப்புதலையும்அறியலாம்.

……………….. நம் ஊர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்
குடுமித் தலைய மன்ற
நெடுமலை நாடன் ஊர்ந்த மாவே.” --- ஐங். 202

தலைவன் தேரை ஈர்த்துவரும் குதிரைகளும் நம்மூர்ப் பார்ப்பனச் சிறார் போலவே தாமும் குடுமித் தலையை உடையனவாயின. ----------தொடரும்.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக