ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் –91 : 29.அன்றில் பறவை

தொல்தமிழர் அறிவியல் –91 :  29.அன்றில் பறவை                   

29.அன்றில் பறவை ---ஆனைக் குருகு


Great Indian hornbills

                              இருவாச்சி என்பது இருவாச்சி குடும்பத்தைச் சேர்ந்த பறவை. இருவாச்சி குடும்பத்தில் இதுவே மிகப்பெரிய பறவையாகும். இப்பறவை நீண்ட காலம் வாழக்கூடியது. இதன் வாழ்நாள் ஏறக்குறைய 50 ஆண்டுகள். உருவ அமைப்பில் பெரிதாக உள்ள இப்பறவைகள், நீளமான வளைந்த அலகைக் கொண்டுள்ளன; அலகுக்கு மேல் கொம்பு போன்ற அமைப்பும் உள்ளது. இந்தப் பறவை ஒரு பேரலகின் மேல் மற்றொரு பேரலகைத் தலைகீழாகக் கவிழ்த்து ஒட்டினாற் போல் இருப்பதால்தான் தமிழில் இருவாய்க் குருவி என்ற விந்தைப் பெயரால் அழைக்கப்படுகிறது. மரங்களில் வசிக்கும் இந்தப் பறவைகள் பழங்கள், பூச்சிகள், சிறு பிராணிகள் போன்றவை உணவாகக் கொள்கின்றன.
காணப்படும் இடங்கள்
                         இருவாச்சியின் பூர்வீகம் தமிழ்நாடு. இவை இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, அருணாசலப் பிரதேசத்தில் உள்ள கீழ் இமயமலைப் பகுதிகள், வடகிழக்குப் பகுதிகளில் இவை காணப்படுகின்றன [1]. இப்பறவை கேரள மாநிலம் மற்றும் அருணாசலப் பிரதேச மாநிலத்தின் மாநிலப்பறவையும் ஆகும்.
சூழியல்
                           ஆண், பெண் சேர்ந்து வாழும், பெரும்பாலும் அந்த இணை சாகும் வரை பிரிவது கிடையாது. பெண் பறவை முட்டையிடும் பருவத்தில் ஆண் பறவையுடன் சேர்ந்து பெரிய பொந்தைக் கொண்ட உயர்ந்த மரத்தை தேர்வு செய்து அங்கே தங்கும்; அந்தப் பொந்தினுள் பெண் பறவை தங்கியிருக்கும்; ஆண் பறவை அதன் வாயிலை இலை, தழைகளை கொண்டு மூடிவிடும்; பெண் பறவைக்கு உணவு கொடுக்க மேற்புரம் ஒரு துளையையும், பறவை தன் கழிவுகளை வெளியேற்ற கீழ்புறம் ஒரு துளையையும், ஆண் பறவை அமைக்கும். குஞ்சுகள் பிறந்து அது பறக்கும் வரை பெண் பறவை இரை தேடச் செல்வதில்லை. ஆண் பறவை பெண் பறவைக்கும், குஞ்சுகளுக்கும் உணவைப் கொண்டு வந்து தரும்.
விருத்தி வரலாறு
                         இருவாச்சி 150 கிராம் எடை கொண்ட மூன்று முதல் ஐந்து முட்டைகளை இட்டு அடைகாக்கும்; குஞ்சுகள் வளர்ந்து தாமாகப் பறக்க மூன்று மாத காலமாகும்; குஞ்சுகள் தாமாகவே பறக்கும் ஆற்றலைப் பெற்றவுடன் இந்த கூட்டை உடைத்து கொண்டு உள்ளிருந்த இருவாச்சி பறவைகளும் ஆண் இணையும் பறக்கத் துவங்கி விடுகின்றன.
                               இந்திய சாம்பல் இருவாச்சி (Indian Grey Hornbill) இந்தியத் துணைக்கண்டத்தில் பொதுவாகக் காணப்படும் ஓர் இருவாச்சி இனப்பறவை. இது ஒரு மரவாழ் பறவையாகும். மேலும் இணையுடனே பொதுவாகக் காணப்படும். இதன் உடல் முழுவதுமுள்ள சிறகுகள் சாம்பல் நிறத்திலும் வயிற்றுப் பகுதி சற்று வெளிர் சாம்பல் நிறத்திலோ அல்லது வெண்ணிறத்திலோ இருக்கும். இப்பறவை இரண்டு அடி நீளம் இருக்கும்.”
-----------விக்கிபீடியா.
அன்றில்
நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்
இறவின் அன்ன கொடுவாய்ப் பெடையொடு
தடவின் ஓங்குசினைக் கட்சியில் ...
                     மதுரை மருதன் இளநாகன், குறுந். 160 : 1 – 3
                     தோழி, நெருப்பைப் போன்ற சிவந்த தலையையுடைய ஆண் அன்றில் பறவை, இறாமீனைப் போன்ற வளைந்த அலகினையுடைய தன் பெண் அன்றிலுடன், தடா மரத்தின் உயர்ந்த கிளையின்கண் உள்ள தன் கூட்டிலிருந்து, தம் காதலரைப் பிரிந்தோர்க்குச் செயலறவு தோன்றும்படி ஒலிக்கும்.
                              அன்றில், ஆணும் பெண்ணுமாய் இணைந்து வாழும் பறவைகள். கிரெளஞ்ச மிதுனம்  என்ற பறவையினம் போல இரட்டையாய் வாழ்வதால் புணர் அன்றில் எனப்பட்டது.அன்றில் ஒரு கண் துயின்று, ஒரு கண் ஆர்வத்தால் தன் துணைமேல் வைத்து உறங்கும் அன்புடைய பறவையாகும். இது, சக்கரவாகம் போல் பகலில் புணரும் பறவை என ரா, இராகவையங்கார் குறிப்பிடுவார். நாகாலாந்து பழங்குடி மக்களின் வழிபாட்டிற்குரியது. அன்றில் பறவையின் இறகுகளைத் தலையில் சூடி
 ஆடுவர். ,,,,,
மேலும் காண்க : நற். 124, 152, 303. குறிஞ்சிப். 219.----------தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக