செவ்வாய், 3 செப்டம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் – 72 :  24. கூந்தல்கழித்தல்

24. கூந்தல்கழித்தல்

                                    Having short hair is a fashion trend nowadays. But this wasn’t the case always. Did you know that in the 1800 and in the early 1900 the woman who had short hair were considered as unfaithful. Short hair of a woman used to be the symbol of infidelity. ….. “
---Times of India ,11/12/16
                            மேலை நாடுகளில் 19 ஆம் நூற்றாண்டில் மகளிர்தம் குட்டை முடி ஒரு குறிப்பிட்ட கருத்தைப் புலப்படுத்தியதாக வழக்கில் இருந்துவந்துள்ளது. தங்கள் கூந்தலைக் குட்டையாகக் குறைத்துக் கொண்டவர்கள் உண்மையற்றவர்களாக அறியப்பட்டனர்.
தமிழர் பண்பாட்டில் சங்ககாலம் தொடங்கி இன்றுவரை இலக்கியங்களிலும் சமுகத்திலும்  உலக அளவிலும்  பெண்களின் கூந்தல் பற்றி நிலவிவரும் கருத்துகளை / மதிப்பீடுகளை ஈண்டுக் காண்போம்.

பெண்டிற்கு அழகாவன
 அகல் அல்குல் தோள் கண் என மூவழிப் பெருகி
 நுதல் அடி நுசுப்பு என மூவழிச் சிறுகிக்
 கவலையால் காமனும் படைவிடு வனப்பினோடு
--சோழன் நல்லுருத்திரன்.கலித்.108: 2 - 4
அல்குல். தோள். கண் என்ற மூன்றும் பெருத்து ; நெற்றி. அடி இடை என்ற மூன்றும் சிறுத்து மன்மதனும் தன் படைக்கலன்களைக்  கைவிடுதற்குக் காரணமான அழகோடு வருபவளே.

கூந்தல்
கதுப்பு – (கன்னம்) கூந்தல்
குழல்கூந்தல், ஐம்பாலுள் சுருக்கி முடிக்கப்படுவது. மயிர்க்குழற்சி
கூந்தல்பெண் மயிர்
முடிஉச்சியில் முடிதல், உச்சி
கூழைகூந்தல் குறைத்த
ஓதி ---- கூந்தல்
ஆடுவண்டு இமிரா அழலவிர் தாமரை
நீடுஇரும் பித்தை பொலியச் சூட்டி 
       --கடியலூர் உருத்திரங்கண்ணனார். பெரும்பா. 481 - 482           
 வண்டுகள் மொய்க்காத தீயிடத்தே கிடந்து மலர்ந்த வெண்பொற்றாமரையை நீண்ட கரிய மயிரிடத்தே அழகு பெறச் சூட்டி
நல் நெடுங் கூந்தல் நறுவிரை குடைய
--மாங்குடி மருதனார். மதுரைக்.552.
நன்றாகிய நெடிய மயிரில் பூசிய மணம் வீசும் மயிர்ச் சந்தனத்தை நீராடி நீக்கினர்.
 ஒலிமென் கூந்தல் என் தோழி…..
                                         --கபிலர். குறிஞ்சிப்.
தழைத்த மெல்லிய கூந்தலையும் உடைய என் தோழி.
பல்வேறு உருவின் வனப்பு அமை கோதை அம்
 மெல்லிரு முச்சி கவின் பெறக் கட்டி
                                                                             --கபிலர். குறிஞ்சிப்.
பலவாய் வேறுபட்ட நிறத்தைக் கொண்ட அழகமைந்த மாலைகளை எம்முடைய கரிய தலைமுடியில் அழகு பெறச் சூட்டிக் கொண்டோம்.
முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய
வாரேன் வாழிய நெஞ்சே.”
                         --கடியலூர் உருத்திரங்கண்ணனார்.  பட்டினப்.
குறையாத செல்வ வளமுடைய காவிரிப்பூம் பட்டினமே எனக்கு உரிமையாகக் கிட்டுவதாயினும் நீண்ட கரிய கூந்தலையும் விளங்கும் அணிகலன்களையும் உடைய என் காதலி என்னைப் பிரிந்து தனித்திருப்பநெஞ்சே! அவளைத் துறந்து யான் நின்னுடன் வருதல் இயலாது.
குமரி மகளிர் கூந்தல் புரைய
அமரின் இட்ட அருமுள் வேலி
               ஆவூர் மூலங்கிழார், புறநா. 301: 2-3
மணம் செய்யப்பெறாத இளம்பெண்ணின் கூந்தலைப் போல, ஒருவராலும் தீண்டப் பெறாத இயல்புடைத்தாய், போர் குறித்து இடப்பட்ட  இடுமுள் வேலி.
கோல்திரள் முன்கைக் குறுந்தொடி மகளிர்
நாறிருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே.
                    --கபிலர்.புறநா. 113: 8-9
கோல் தொழிலாகச் செய்யப்பட்ட திரண்ட குறிய வளையணிந்த முன்கையினை உடைய மகளிரது மணம் கமழும் கரிய கூந்தலைத் தீண்டுதற்கு உரியவரை நினைந்து..
மலர் சூட்டும் உரிமை
தேம்பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு நின்
தண்நறு முச்சி புனைய......                             அகம்.221: 8 - 9

நம் தலைவன் வெண்கடப்ப மரத்தின் தேன் சிந்தும் மென்மையான பூங்கொத்துக்களைத் தளிருடன் கொண்டு வந்து நினது குளிர்ச்சி பொருந்திய கூந்தலில் சூட்டுவான்..
வணர்சுரி முச்சி ... வளைந்து சுருண்ட கூந்தல்... அகம். 390
கலிமயிற் கலாவத்தன்ன இவள்
ஒலிமென் கூந்தல் உரியவால் நினக்கேகுறுந். 225: 6 - 7
கூந்தல் அணை கொடுப்பேம் யாம். கலித்.101
தோடேந்து பூங்கோதை வேண்டேம் கூந்தல்
 தொடேல்..சீவக. 1229.
மணம் கமழும் கூந்தல்
நிதியம் துஞ்சும் நிவந்தோங்கு வரைப்பின்
வதுவை மகளிர் கூந்தல் கமழ்கொள்
-                                             --காவட்டனார், அகநா. 378 : 1,2
           மிக்க பொருள் தங்கும்  உயர்ந்தோங்கும் மனையகத்தே, கலியாணம் செய்த மகளிர்தம் கூந்தல்போல் மணம் பொருந்துமாறு…. மணங்கமழும் வேங்கை மரத்தின் பொன்னிறத் தாதுக்கள் காற்று அடித்தலால் உதிர….
 முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேல் உண்கண் வேய்த்தோள் அவட்கு
                                                              குறள். 1113
வேய் போலும் தோளினை உடைய அவளுக்கு நிறம் தளிர் நிறமாயிருக்கும், பல் முத்தமாயிருக்கும் இயல்பாய நாற்றம் நறு நாற்றமாயிருக்கும் உண்கண்கள் வேலாயிருக்கும்.------தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக