திங்கள், 28 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 94 - 95

நற்றிணை – அரிய செய்தி – 94 - 95
பொய்யோ – புதிரோ
  அகல் இரு விசும்பின் அரவும் குறைபடுத்த
 பசுங் கதிர் மதியத்து அகல் நிலாப் போல
மடல் பாடிய மாதங்கீரனார். நற்.377 : 6 – 7
 அகன்ற கரிய வானத்தில் அரவு விழுங்குதலால் குறைவுபட்ட பசிய கதிரை உடைய திங்களின் பலவாகிய ஒளியைப் போல…..
மேலும் காண்க: அகம். 313; கலித். 15.
( இப்புராணச் செய்தியைப் பலரும் பாடியுள்ளனர். திங்களைப்  பாம்பு விழுங்கும் என்பதைத் தமிழ்ப் புலமையோர் கூறுவரோ ? – அரவு என்ற சொல்லுக்கு வருத்து என்ற பொருளும் உண்டு ; ஒளியை இருள் கவ்வுதல் அஃதாவது நிறைந்த குளிர்ச்சியான ஒளியை ( நிலவை)  இருள் கொஞ்சம் கொஞ்சமாகப் பாம்பு இரையை விழுங்குவதைப் போலத் தீண்டி வருத்துகிறது .)
நற்றிணை – அரிய செய்தி – 95
பொன் விளையும்…
1)  ………………………. சேவலொடு
   சிலம்பின் போகிய சிதர்கால் வாரனம்
   முதைச் சுவல் கிளத்த பூழி மிகப்பல
   நன் பொன் இமைக்கும் ……………….
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார். நற். 389 : 7 – 10
 மலையிடத்தே சென்று கோழி தன் சேவலுடனே  பழங் கொல்லையின் மேற்புறத்தைக் கிளறும் புழுதியிடத்தே மிகப் பலவாய் நல்ல பொன் ஒளி வீசித் தோன்றும்.
மணி விளையும்
  2) வாழைஅம் சிலம்பில் கேழல் கெண்டிய
      நிலவரை நிவந்த பலவுறு திருமணி
     ஒளி திகழ் விளக்கத்து ………………..
தொல்கபிலர் . நற். 399 : 4 – 6
வாழை மரங்கள் நிறைந்த மலையிடத்தே காட்டுப் பன்றித் தோண்டுதலால் நிலத்திலிருந்து வெளியே வீழ்ந்த பலவாகிய மணிகள் ஒளிவிட்டு விளங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக