புதன், 30 செப்டம்பர், 2015

ஐங்குறுநூறு – அரிய செய்தி – 1 - 2

ஐங்குறுநூறு
உரையாசிரியர்- பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி
மருதத் திணை - ஓரம்போகியார்
ஐங்குறுநூறு – அரிய செய்தி – 1 - 2
இந்திர விழா
இந்திர விழவிற் பூவின் அன்ன
ஓரம்போகியார். ஐங். 62 : 1
 இவ்வூரில் வாழும் பரத்தை மகளிர் பலரையும் இந்திர விழாவில் ஆடல் பாடல்களை நிகழ்த்துதற்குக் கூட்டுவது போல …..
 இந்திர விழாவின் போது ஊர்த் தலைவர் பரத்தையரைத் தொகுத்துக் கொணர்ந்து ஆடல் பாடல் நிகழ்த்தச் செய்த பண்டை வழக்கத்தினை சுட்டுகிறது போலும். (  “ இந்திர விழவிற் பூ “ என்பதனை மகளிர்க்கு அடையாக்கி இந்திர விழாவிற்குப் பூக்களைத் தருவித்துத் தொகுத்தாற் போல ) என்றும் உரை வகுப்பர்.
 இந்திர விழாவின் பல்வேறு கூறுகளையும் மிக விரிவாக முதலில் கூறிய நூல் சிலப்பதிகாரமே. அவ்விழாப் பற்றிய முதல் சங்க நூல் சான்று இச்செய்யுளே.  
ஐங்குறுநூறு – அரிய செய்தி – 2

தைந் நீராடல்
நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் திங்கள் தண்கயம் …
  ஓரம்போகியார். ஐங். 84 : 3 – 4
நறுமணம் கொண்ட மலர்களை அணிந்து ஐந்துவகையாகக் கோலம் செய்யத்தக்க கூந்தலை உடைய இளமகளிர் தைத் திங்களில் தவத்துக்குரிய நீராடுவதற்கு இடமான குளிர்ந்த குளம்…..
  ஐம்பால் என்பதற்குக் கூந்தல் எனப் பொருள் கூற இடமிருப்பினும் ஐந்து வகையாக ஒப்பனை செய்தல் என்னும் பொருள் சிறப்புடையது. ஐவகை ஒப்பனையாவன முடி. சுருள். பனிச்சை. குழல். கொண்டை ஆகியனவாம். தைத் திங்கள் பனி மிகுந்திருத்ததாலின் நீர் நிலைகள் தண்ணெனக் குளிர்ந்திருத்தல் இயல்பு. இத்திங்கள் கன்னிப் பெண்கள் நீராடி நோன்பு மேற்கொள்ளற்குரியதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக