புதன், 2 மார்ச், 2016

முல்லைப்பாட்டு – அரிய செய்தி : 2

முல்லைப்பாட்டு – அரிய செய்தி : 2
விரிச்சி  ( நற்சொல்)  கேட்டல்
அருங்கடி மூதூர் மருங்கில் போகி
யாழிசை இனவண்டு ஆர்ப்ப நெல்லொடு
 நாழி கொண்ட நறுவீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய் கைதொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப  
                                     நப்பூதனார், முல்லைப். 5 :  7 – 11
                  மாலைப் பொழுதில், வயது முதிர்ந்த பெண்கள், அரிய காவல் கொண்டதும், பழமையானதுமான ஊரின் புறத்தே சென்றனர் -  யாழிசை போலும் ஒலிக்கும் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரிக்கும் அரும்புகள் மலர்ந்த முல்லைப் பூக்களை நாழியில் கொண்ட நெல்லோடு தூவி, தெய்வத்தை வணங்கி நற்சொல் கேட்டு நின்றனர்,
                     பெண்டிர், தெய்வம் உறையும் இடங்களுக்கு நெல்லும் மலரும் கொண்டு சென்று வழிபடுவது சங்க காலப் பழக்கவழக்கங்களுள் ஒன்றாகும், விரிச்சி கேட்டல் என்பது பழந்தமிழ் மக்களிடம் நிலவிய ஒரு நம்பிக்கையாகும். தாம் விரும்பி மேற்கொள்ளும் செயல் நன்கு முடிதலை விரும்பி, அதற்கான நன்னிமித்தம் பெறும் வகையில், ஊரின் புறத்தே படியில் நெல்லும் மலரும் கொண்டுசென்று தெய்வத்தை வழிபட்டு நிற்பர். அப்பக்கம் செல்வோர் கூறும் சொல் தமக்கு ஏற்றதாக இருப்பின், தாம் மேற்கொள்ளும் செயல் இனிது நிறைவேறும் என நம்பிக்கை கொள்வர். மன்னர்களும் ஊரில் நற்சொல் கேட்டுவரச் செய்வர்.
( நாழி – படி , முகத்தல் அளவை ; வீ – மலர் ;  அலரி – மலர்ந்தபூ  ; விரிச்சி – நற்சொல்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக