வெள்ளி, 8 ஏப்ரல், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 28

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 28
ஓணம் பண்டிகை
கணம்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓண நல்நாள்
கோணம் தின்ற வடுஆழ் முகத்த
சாணம் தின்ற கயம் தாங்கு தடக்கை
மறம்கொள் சேரி மாறுபொரு செருவில்
மாறாது உற்ற வடுப்படு நெற்றி
சுரும்பு ஆர் கண்ணிப் பெரும்புகல் மறவர்
             மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 590 – 596
 திரட்சிகொண்ட அவுணரை வென்ற பொன்னால் செய்த மாலையை உடைய, கருநிறம் உடைய திருமால் பிறந்த ஓணமாகிய நன்னாளில் ஊரில் உள்ளார் விழா எடுப்பர்.
இற்றை நாள் போர் செய்வோம் என்று கருதி மறத்தைக் கொண்டிருக்கும் தெருக்களில், தம்மில் தாம் மாறுபட்டுப் போர் செய்யும் போரில், மாறாமல் தம்மீதுபட்ட அடியால் வடுவழுந்திய நெற்றியையும், சுரும்புகள் மொய்க்கும் போர்ப் பூவினையும், பெரிய விருப்பத்தினையும் உடைய மறவர்.
 திருமாலுக்கு மதுரையில் ஓணநாள் விழா நிகழ்த்தப் பெற்றது. அவ்விழாவில் மறவர்கள் சேரிப்போர் நிகழ்த்துதல் வழக்கமாகும்.
( காழகம் – நீல நிறமுடைய ஆடை ; கோணம் – தோட்டி (அங்குசம்) ; சாணம் – தழும்பு ; சமம் – போர்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக