ஞாயிறு, 1 ஜூன், 2025

தமிழமுது -44 - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு – ஊழ்வினை – உறுதிப் பொருள்.

 

தமிழமுது -44 - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு ஊழ்வினைஉறுதிப் பொருள்.

 

ஊழ்வினை வழிபாட்டோடு தொடர்புடையது. தெய்வத்தால் விதிக்கப்பட்டது என்ற எண்ணம் தொன்மஒயானது.

 

நீர்வழிப்படூஉம் புணை போல் ஆருயிர்

முறைவழிப் படூஉம் …. _புறநானூறு 192.

 

ஊழ்வினை பால், வரை, தெய்வம் எனவும் ஊழின் ஆற்றல் விளக்கப்படுகிறது. சிலப்பதிகாரம்ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்…” என்கிறது.

 

உண்மையில் ஊழ் வேறு வினை வேறு, வினைக் கோட்பாடு தமிழருடையது. வினை,  செயலின் பயனே;  பிற்காலத்தில் பிறவிப் பயனைக் குறிப்பாதாகக் கொள்ளப்பட்டது.

 

வினை வேறு விதி வேறு. ஒரு செயலின் முடிவு அதனைச் செய்தானின் வேறாக வெளியேயிருந்து தீர்ப்புரைக்கும் ஒருவனால் திணிக்கப்படுவதன்று.  உண்மையில் செயலின் விளைவென்பது அச்செயலின் ஒரு பகுதியே !  வினைவிதிக்கு நேர் மாறானது.

 

வினை விதைத்தவன் வினையை அறுப்பான்.

தினை விதைத்தவன் தினையை அறுப்பான்.”

முற்பகல் செயின் பிற்பகல் விளையும் பழமொழிகளைக் காண்க.

 

உறுதிப் பொருள்:

இதுவும் வழிபாட்டோடு தொடர்புடையதுதான். மனித வாழ்க்கையில் பெறவேண்டியது மூன்றா நான்கா….? (அறம்,பொருள், இன்பம், / வீடு )

தமிழர் இறந்தபின் எய்தும் நிலை குறித்துக் கவலை கொள்ளவில்லை. வாழும் வாழ்க்கை, பயனுடையதாக (தனக்கும் பிறர்க்கும்) இருக்கவேண்டும் என்றே கருதினர். வீடு – (பேறு ) தமிழர் நெறியன்று.

 

சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

   அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல..” புறநானூறு . 31.

 வீடு ஒழிந்த மூன்றையே வாழ்வியல் நெறி எனக் கொண்டனர்.

 

 அறம் பொருள் இன்பம் அடைதல் நூற்பயன் என்பதையே வடமொழிக்கு அடிமையான பிற்காலத் தமிழர்கள் ‘அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயன்’ என்று திரித்துவிட்டனர். வீடும்  உறுதி பொருளில் ஒன்று என்பது பழந்தமிழர் கொள்கை எனில், திருவள்ளுவர்  திருக்குறளை நாற்பாலாகச் செய்யாமல் முப்பாலாகச் செய்திருப்பாரா..? ’குன்றக்கூறல்’ என்னும் குற்றமுடைத்தாகும் என்பதை வள்ளுவர் அறியாரா என்ன…?

 

(இக் கட்டுரையாக்கத்திற்குத் துணைபுரிந்த சான்றோர் பெருமக்களின் திருவடிகளைத் தொழுது நிறைவு செய்கிறேன்.)

 

தமிழமுது – தொடரும்…………………………………..

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக