செவ்வாய், 10 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 21 - 22

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 21 - 22

தமிழ் நாட்டின் எல்லை
கடவுள் நிலைஇய கல் ஓங்கு நெடுவரை
வடதிசை எல்லை இமயம் ஆக
தென் அம் குமரியொடு ஆயிடை
முரசுடைப் பெருஞ் சமம் ததைய ஆர்ப்பு எழ
சொல் பல நாட்டைத் தொல் கவின் அழித்த
போர் அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ
பரணர். பதிற். 43 : 6 - 11

கடவுள் நிலையுடைய கற்கள் ஓங்கிய உயர்ந்த பக்க மலைகளைக் கொண்ட இமயம் வடதிசை எல்லையாகவும் தெற்கில் குமரி எல்லை யாகவும் கொண்டு இடைப்பட்ட அரசர்களுடைய வலிமை கெடும்படி ஆரவாரித்து எழுந்து – புகழ்ந்து சொல்லப்பட்ட பல நாடுகளின்  பழமையான அழகினை அழித்த போர் வல்லமையும் பொன்னால் செய்யப்பட்ட மாலையினையும் உடைய குட்டுவன். ( தொல் தமிழ் நிலவிய தமிழ் நிலத்தை – ஆயக. )
கின்னரம் – பறவை – இதன் இசையை வென்ற யாழினது நரம்பின் இசையோடு ஒன்றுபட்டுச் சேர்ந்த இனிய குரலால் பாடுகின்ற விறலியர்.
 நுண்கோல் – மாத்திரைக் கோல் : இதைப் பாணர்கள் தம் கையில் பிடித்துக் கொண்டு வாழ்த்துதல் மரபாகும்.
பதிற்றுப்பத்து – அரிய செய்தி - 22
கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்
நிலம் புடைப்பன்ன ஆர்ப்பொடு விசும்பு துடையூ
வான் தோய் வெல் கொடி தேர்மிசை நுடங்க
பெரிய ஆயினும் அமர் கடந்து பெற்ற
 அரிய என்னாது ஓம்பாது வீசி
கலம் செலச் சுரத்தல் அல்லது கனவினும்
களைக என அறியாக் கசடு இல் நெஞ்சத்து
ஆடு நடை அண்ணல் ……………………..
பரணர். பதிற். 44 : 1 - 7

நிலத்தைப் புடைப்பதைப் போன்ற முழக்கத்தோடு விசும்பைத் துடைத்து மிக உயர்ந்து வெல்லுகின்ற கொடிகள் தேரின் மீது அசையும் பெருமையுடையவன் ; ஆயினும் போரில் வஞ்சியாது எதிர் நின்று வென்று பெற்ற பொருள்களைக் கிடைத்தற்கு அரியன என்று கருதி அவற்றைத் தனக்கெனப் பேணிப் பாதுகாத்து வைதுக் கொள்ளாமல் பிறர்க்கெல்லாம் வழங்குபவன் – தான் அணிந்த அணிகலன்களை இரவலர்க்கு ஈந்து மகிழ்பவன் – கனவில் கூட “ என்னுடைய துன்பத்தை நீக்குக” என்று பிறரிடம்  கூறுதலை அறியாத குற்றமற்ற மனத்தை உடையவன் -  வெற்றியைத் தோற்றுவிக்கும்  நடையை உடைய பெருமை உடையோன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக