ஞாயிறு, 1 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 5 -6

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 5 -6
பாதுகாப்பு இல்லா நாடு
அரணம் காணாது மாதிரம் துழைஇ
நனந்தலைப் பைஞ்ஞிலம் வருக இந்நிழல் …..
 குமட்டூர்க் கண்ணனார். பதிற்.17  :  9– 10

உங்கள் நாட்டில் பாதுகாப்பாய் இருப்பதற்குரிய இடத்தினைக் காணாது – திசைகளிலெல்லாம் சென்று தேடிய பரந்த இந்நிலவுலகில் உள்ள மக்களே -  சேரலாதனின் குடை நிழலில் வந்து சேருவீர் எனச் சொல்வர்.
பதிகம்
பெருவிறல் மூதூர்த் தந்து பிறர்க்கு உதவி
அமையார் தேய்த்த அணங்குடை நோன் தாள்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக்
குமட்டுர்க் கண்ணனார் பாடினார் பத்துப் பாட்டு. 11 - 14
நிலை பெற்ற பெரும் புகழினையும் குற்றமில்லாத உண்மையினையும் இனிய ஓசையுள்ள முரசினையுமுடைய உதியஞ்சேரனுக்கு அவன் மனைவியாகிய வெளியன் வேண்மாள் நல்லினி – ஈன்ற மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் . இமயமலையின் உச்சியில் தன் கொடியின் வில் உருவத்தைப் பொறித்தவன்.ஐம்பத்தெட்டு ஆண்டுகள் அரசு  வீற்றிருந்தான்.

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 6
மூன்றாம் பத்து - பாலைக் கெளதமனார்
இயற்கையில் மணம் கமழும் கூந்தல்
மண்ணாவாயின் மணம் கமழ் கொண்டு
கார் மலர் கமழும் தாழ் இருங் கூந்தல்
ஒரீஇயின போல இரவு மலர் நின்று
திருமுகத்து அலமரும் பெருமதர் மழைக்கண்
அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து
 வேய் உறழ் பணைத் தோள் இவளோடு
ஆயிரம் வெள்ளம் வாழிய பலவே.
பாலைக் கெளதமனார். 21: 32 – 38
சேரமாதேவியின் கூந்தல் எண்ணெய் முதலிய பூசாத போதும் இயற்கை மணம் கமழ்ந்து நிற்கும். அவளது நீண்ட கரிய கூந்தல் நீராடப் பெற்றுக் கார் காலத்தே பூக்கின்ற முல்லை மலர் அணியப் பெற்றால் அப்பூவின் மணம் கமழும். அவளது பெரிய குளிர்ந்த கண்கள்  குளத்தினின்றும் நீங்கின மலர்கள் போல இரவுப் பொழுதிலும் அவளது அழகிய முகத்தின்கண் மலர்ந்து நின்று சுழலும். அசைகின்ற காந்தள் மலர் விளங்கும் -  நீரைக் கொண்ட நிலத்தில் முளைத்த மூங்கிலை ஒத்தன அவளுடைய பருத்த தோள்கள் – இத்தகைய கூந்தலினையும் கண்களினையும் தோள்களினையும் உடைய நின் தேவியாகிய இவளோடு  - நீ பல ஆயிர வெள்ளம் ஆண்டுகள் வரை வாழ்வாயாக.
( தன் கூந்தலைக் கைசெய்யாமையின் மண்ணாவாயின – என்றார். மண்ணுதல் – பூசுதல். வெள்ளம் – பேரெண்ணைக் குறிக்கும்.) 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக