புதன், 11 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 23 -24

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 23 -24
ஊன் துவை அடிசில்
சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில்
ஓடாப் பீடர் உள்வழி இறுத்து
பரணர். பதிற். 45 : 13 - 14

அரசனுக்குச் சோறு வேறு உள்ளதென்று சொல்லாத வகையில்  எல்லோருக்கும் ஒன்றுபோல உயர்ந்த ஊனையும் துவையலையும் உடைய உணவை – போரில் புறங்கொடுத்து ஓடாத பெருமை அமைந்த தம் வீரர்களுக்கு அவர்கள் இருக்கும் இடங்களில் அளிப்பவன் குட்டுவன்.
( ஊன் – புலால்; துவை – துவையல் ; அடிசில் – உணவு . போர்க்களத்தில் வெற்றி விருந்து அளித்தல் – வீரர்களோடு அரசனும் உடனிருந்து உண்ணுதல் பண்டைய மரபு.)
பதிற்றுப்பத்து – அரிய செய்தி - 24
கடற் போர்
 விலங்கு வளி கடவும் துளங்கு இருங் கமஞ் சூல்
வயங்கு மணி இமைப்பின் வேல் இடுபு
முழங்கு திரைப் பனிக் கடல் மறுத்திசினோரே.
பரணர். பதிற். 45 : 20  - 23
குறுக்காக வீசும் காற்று செலுத்தலால்  அலை முழங்கும் – மிகுந்த நீரை உடையதாகக் கடல் விளங்குகிறது. அத்தகைய கடலில் விளங்குகின்ற மணியைப் போன்ற ஒளி வீசுதலையுடைய வேல் படைகளை ஏவி  - எதிர்த்த பகைவர்களைத் தடுத்தளித்த மன்னர் இனி யார் உள்ளார்? நினக்கு முன்னும் எனில் ஒருவரும் இல்லை என்பதாம். (  கடலகத்துத் தீவு ஒன்றில் இருந்து கொண்டு அவ்வழியே செல்லும் மரக் கலங்களைக் கொள்ளையடித்து வந்த கூட்டத்தினரைச் செங்குட்டுவன் தன் படைகளைச் செலுத்தி அவர்களை அழித்தான் என்பது வரலாறு . மேலும் காண்க : அகநா. 212.)
(ஆண்டு நீர்ப் பெற்ற தாரம் ஈண்டு இவர்
கொள்ளப் பாடற்கு எளிதினின் ஈயும்
                    பரணர். பதிற். 48 : 5 – 6
 கடலின்கண் வாழும் பகைவரிடமிருந்து அரிதாகப் பெற்று வந்த பொருள்களையெல்லாம் அவற்றின் அருமை பாராது பாடுநர்க்கு எளிதில் ஈய வல்லான். தாரம் – பண்டங்கள்.)
நல் நுதல் விறலியர் – ஈண்டு  அழகிய நெற்றியை உடைய பாண் மகளிரை; மகளிர்க்கு நெற்றி சிறுத்திருத்தல் அழகின் இலக்கணமாதலின் நல் நுதல் என்றார் . ( மேலும் காண்க : இவ்வழகு –” நுதல் அடி நுசுப்பு மூவழிச் சிறுகி “ கலித். 108.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக