திங்கள், 19 ஆகஸ்ட், 2019

தொல்தமிழர் அறிவியல் – 57 : 18. குடவோலை – தேர்தல்

தொல்தமிழர் அறிவியல் – 57 : 18. குடவோலைதேர்தல்

18. குடவோலைதேர்தல்

                   “வரலாற்றில் மிகவும் முற்பட்ட பண்டைய கிரேக்கம் மற்றும் பண்டைய ரோமானியர்கள் காலத்திலேயே தேர்தல்கள் அமலுக்கு வந்து விட்டிருந்தன. மத்திய கால கட்டத்தில் புனித ரோமானியப் பேரரசர்மற்றும் போப்பாண்டவர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் இருந்தது.[2] அரசாங்கப் பதவிகளுக்காக பொதுத் தேர்தல்கள் நடத்தப்படும் நவீன "தேர்தல்" முறை, 17ஆம் நூற்றாண்டு வரை உருவாகவில்லை.. அந்தக் கால கட்டத்தில்தான், பிரதிநிதித்துவ அரசாங்கம் என்ற கருத்தாக்கம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் எழுந்தது.[2]” – (wikkipedia)
குடவோலை

கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்
பொறி கண்டழிக்கும் ஆவண மாக்களின்
                                          மருதனிளநாகனார், அகநா. 77: 7,8

                            கயிற்றால் பிணித்தலையுற்ற குடத்திலுள்ள ஓலையை எடுத்துக்கோடற்கு, அக்குடத்தின் மேலிட்ட இலச்சினையை ஆய்ந்து நீக்கும், அவ்வோலையைத் தேரும் மாக்கள் அவையிற்றை வெளியே ஈர்த்தெடுத்தல் போல.( ஊராண்மைக் கழகங்கட்கு உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தற் பொருட்டு, உடன்பாடு தெரிவிக்கும் தகுதியுடையார் பலரும் எழுதிக் குடத்தின் கட் போட்ட ஓலைகளை, ஆவண மாக்கள் பலர்முன் குடத்தின்மேலிட்ட இலச்சினையைக்கண்டு, நீக்கி உள்ளிருக்கும் ஓலைகளை எடுத்து எண்ணித் தேரப்பட்டார் இவரென்ன முடிபு செய்வதோர் வழக்கத்தினைக் குறிப்பது. இது குடவோலை என்று கூறப்படும்.பழைய கல்வெட்டுக்களில் இம்முறை விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.---ந.மு. வே. நாட்டார் உரை.

                       உத்திரமேரூர் கல்வெட்டில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் குடவோலை முறையில் தேர்தல் நடந்ததாகக் குறிக்கப்பட்டுள்ளது. ஆயினும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொல்தமிழகத்தில் குடவோலை முறையில் தேர்தல் நடந்ததற்கான சான்று அகநானூற்றில் கிடைத்துள்ளது. இந்தியத் தேர்தல் வரலாற்றில் இதுவே மிகவும் தொன்மைவாய்ந்த தேர்தல் நடைமுறையாகும்.
அறிவியல் நோக்கு-----தொடரும்......

1 கருத்து: