செவ்வாய், 15 அக்டோபர், 2019

தொல்தமிழர் அறிவியல் –114 : 39. முந்நீர்

தொல்தமிழர் அறிவியல் –114 :  39. முந்நீர்

39. முந்நீர்

 முந்நீர்கடல் ; ஆற்று நீரும் ஊற்றுநீரும் மழை நீருமுடைய தென்பது பொருள்.
முந்நீர் வழக்கம் மகடூஉவொடு இல்லை
                                                   --தொல்.பொரு. 1 : 37                                                       
கடல்வழிப் பயணம் செல்லும்போது பெண்டிரை அழைத்துச் செல்வதில்லை

களிறே முந்நீர் வழங்கு நாவாய் போலவும் ” –  புறநா.13.
களிறே கடலின்கண்ணே இயங்கும் மரக்கலத்தை ஒப்பவும்.

கரைபொரு முந்நீர்த் திமிலிற் போழ்ந்தவர்” - புறநா.303.
முந்நீ ருடுத்தவிவ் வியனுல கறிய” ---  புறநா.382.

எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
 முந்நீர் விழவி னெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.” 
                --பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியை நெட்டிமையார் பாடியது. --புறநா.9.
                  
                       எம்முடைய வேந்தனாகிய குடுமி வாழ்வானாக ; தம்முடைய கோவாகிய, சிவந்த நீர்மையையுடைய போக்கற்ற பசிய பொன்னைக் கூத்தர்க்கு வழங்கிய முந்நீர்க் கடற்றெய்வத்திற்கு எடுத்த விழாவினையுடைய நெடியோனால் (பி.ம். உயர்ந்தோனால்) உளதாக்கப்பட்ட நல்ல நீரையுடைய பஃறுளி என்னும் ஆற்றின் மணலினும் பலகாலம் . (வாழிய)

                   … யாற்று நீரும் ஊற்றுநீரும் மழை நீருமுடைமையால், கடற்கு முந்நீர் என்று பெயராயிற்று ; அன்றி முன்னீரென்றோதி நிலத்திற்கு முன்னாகிய நீரென்றுமுரைப்ப.
                    
                       முந்நீர்கடல் ; ஆகுபெயர் ; ஆற்றுநீர் ஊற்றுநீர் மேனீரென இவையென்பார்க்கு அற்றன்று ; ஆற்றுநீர் மேனீராதலானும் இவ்விரண்டுமில்வழி  ஊற்றுநீரும் இன்றாமாதலானும் இவற்றை முந்நீரென்றல் பொருந்தியதன்று ; முதிய நீரெனின்நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றும்” (குறள். 17) என்பதனால் அதுவும் மேனீரின்றி அமையாமையின் ஆகாது ; ஆனால் முந்நீர்க்குப் பொருள் யாதோவெனின் முச்செய்கையையுடைய நீர் முந்நீரென்பது ; முச்செய்கையாவன மண்ணைப் படைத்தலும் மண்ணை யழித்தலும் மண்ணைக் காத்தலுமாம் என்பார் அடியார்க்குநல்லார்(சிலப்.17: முந்நீரின்)

மகம் முந்நீர் விழா

                       கடலில் நீராடல், ஆற்று நீராடல், குளத்தில் நீராடல் ஆகிய மூன்று வகையான புனித நீராடல்களை முந்நீர் விழா என்று கூறலாம்.
                    முந்நீர் என்பது முதல் நீரான கடலையும் குறிக்கும் ; கடல்நீர் என்பதும் பொருந்துவதே. கடலாடு காதை (சிலம்பு)
                    முந்நீரில் முதலாவதாக வைத்து எண்ணப்படவேண்டியது மழை  ;மழையின்றேல் ஆற்று நீரும் ஊற்று நீரும் இல்லையாகும்.
நீரின்று அமையாது உலகுஎன்றுரைக்கும் வள்ளுவர்,

வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று. (11)
                   மழை நிலையாக நிற்பதால், உலகம் நடைபெற்று வருகின்றது அதனால் அம்மழை தான் உயிரினங்களால் அமிழ்தம் என்று போற்றப்படும் தன்மையினையுடையது.

இன்சுவை முந்நீர்

நுங்கு நீர்கரும்புச்சாறு …. இளநீர்

இரும் பனையின் குரும்பை நீரும்
பூங் கரும்பின் தீஞ் சாறும்
ஓங்கு மணற் குவவுத் தாழைத்
தீம் நீரோடுடன் விராஅய்
முந்நீருண்டு ……………………..
       --மாங்குடி கிழார். புறநா. 24 : 12 ~ 16

                வளையலணிந்த மகளிர் பெரிய பனையினது நுங்கின் நீரும் பொலிவினையுடைய கரும்பினது இனிய சாறும் உயர்ந்த மணலிடத்துத் திரண்ட தெங்கினது இனிய இளநீருடனே கூடக் கலந்து இம்மூன்று நீரையும் உண்டு மகிழ்ந்தனர்.

அறிவியல் நோக்கு

Cycles on Earth
                 Almost all materials on Earth are constantly being recycled. The three most common cycles are the water cycle, the carbon cycle, and the rock cycle.-------தொடரும்……

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக