புதன், 26 ஏப்ரல், 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 12 ஆய்தம் –எழுத்தாய்வு - 2

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 12

ஆய்தம் எழுத்தாய்வு - 2

புள்ளி

”ஒன்றை நீக்குவதற்கு அளவின் குறைவினைக் காட்டுதற்குப் புள்ளியிடும் வழக்கம் இருந்துவந்துள்ள தென்பதை உணருகிறோம். தொல்காப்பியர் புள்ளி பற்றிக்கூறிய சூத்திரங்களயெல்லாம் நோக்குமிடத்து  மாத்திரையில் குறைவுற்ற நிலையினை எடுத்துக்காட்டவே  புள்ளி பயன்பட்டிருப்பதைக் காணக்கூடியதாயுள்ளது. இவ்வாறமைந்த புள்ளிகளெல்லாம் சில வரிவடிவங்களுடனேயே அமைகின்றன. ஆனால் ஆய்தம் மட்டும் எந்த வரிவடிவத்துடனும் தொடர்புறாது தனிப் புள்ளியாகவே அமைந்துள்ளது. இது பொருள் வேறுபடுத்தும் ஒலியனைப்போல ஓர் எழுத்து நீக்கிவிட்டு அவ்விடத்திலே  நின்று இசைக்கும் புள்ளியாகவே இருந்திருக்க வேண்டும்.

அது என்பதன் பண்டைய வடிவம் அஃது ஆகும். இது அவ்+ து என்பதன் விளைவு எனக்கூறுவர். ஆனால் அவ்+து புணரின் அத்து எனவே வரவேண்டும். இதுபோலவே அல்+திணை அற்றிணை எனவும் முள்+தீது முட்டீது எனவும் புணர வேண்டும். இவ்வாறு அமையின் அவை வேறு பொருளையும் பயக்கலாம் என்பதற்காக அத்து, அற்றிணை, முட்டீது என்னும் சொற்களிலே முறையே த், ற், ட், ஆகிய ஒலிகள் நீக்கப்பட்டு, அவற்றின் நீக்கத்தைக் குறிக்கப் புள்ளிகள் இடப்பட்டிருக்க வேண்டும் . அவ்வாறு அமையும் புள்ளி வெறும் பூஜ்ஜியமாகவன்றி பொருள் வேறுபடுத்தும் ஒலியனாக அமைந்துவிடுகிறது. சார்பெழுத்துகள் மூன்றும் –ஒலியன்கள். மூன்றுக்கும் தனித்தனி வரிவடிவங்கள் என்பதே தொல்காப்பியர் கருத்தாகும்.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக