ஞாயிறு, 11 அக்டோபர், 2015

Francis Whyte Ellis -- தொடர்ச்சி

Francis Whyte Ellis -- தொடர்ச்சி
-------------------------தொடர்ச்சி
Francis Whyte Ellis – என்பது இப்பெருமானின் முழுப்பெயர். 1796 – ஆம் ஆண்டு இந்தியாவிற்கு கம்பெனியாரின் ஒரு நிர்வாக அதிகாரியாக வந்தவர். இவர் சென்னையில் பொருளாளர் பதவி வகித்தபொழுது மூன்றாம் ஜார்ஜ் மன்னர் ஆங்கிலப் பேரரசராக விளங்கினார். இந்தியாவில் இருந்த 23 ஆண்டுகளில் சமஸ்கிருதத்திலும் திராவிட மொழிகளிலும் சிறந்த புலமைபெற்று மொழி. வரலாறு. தொல்லியல் ஆகியவற்றில் சிறந்த தொண்டுகள் புரிந்துள்ளார். இவரது தமிழ்ப் புலமைக்கு இக்கல்வெட்டுக்களே போதுமான சான்றாகும். 1819 -  ஆம் ஆண்டு எல்லிசன் இராமநாதபுரம் கலெக்டரின் விருந்தினராகச் சென்றிருந்தபொழுது ஏதோ ஒரு விஷத்தை உட்கொண்டதால் எதிர்பாராதவிதமாக மாண்டார்.
                    அவரது கல்லறை திண்டுக்கல்லில் இருக்கிறது. அதிலுளள அவரது நினைவைக் குறிக்கும் கல்வெட்டும் பண்டைய புறநானூற்றுப்  பாணியில் அமைந்துள்ளமை கவனிக்கத்தக்கது. எல்லிஸ் மனுநீதியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததாக இக்கல்லறைக் கல்வெட்டுக் கூறுகிறது. இவர் எழுதிய பல நூல்கள் நமக்குக் கிடைக்காது மறைந்துபோனது வருந்தத்தக்க ஒன்றாகும். அப்பெருமானின் கீர்த்தியை இக்கல்வெட்டுகக்கள் எடுத்துரைக்கின்றன.
எல்லிசனின் கல்லறைக் கல்வெட்டு
மிக்க புகழ் மணந்து விரிந்து தழைத்து
திக்கனைத்தும் படர்ந்திடு மிங்கிலீசு
குலப்பூக் கொடிக்கொரு கொழுமல ரொப்போன்
கல்வியறிவிலாக் காரிருளிரியச்
செல்வச் சங்க செழுங்கதிர் விரிந்தருள்
எல்லீசனென்னும் மியற்பெயருடையோன்
இத்தேயத்திலியன்றா பல சொற்களில்
முத்தமிழாரிய முதற்பல கசடறக்
கற்றறிந்தவற்றுள் கலைபல் வுணர்ந்தோன்
புத்தமிழ்தெனத் தமிழ்ப் பொழி திருவாக்கினன்

மநுமுதனூல்களில் வழக்கு நெறியனைத்தும்
இனமுறத் தொகுத் திங்கிலீசில் விரித்தோன்
திருவள்ளுவப் பெயர்த் தெய்வஞ் செப்பி
யருள் குறணூலுளறப் பாலினுக்குத்
தங்கு  பல நூலுதாரணப் பாடலைப்பெய்
திங்கிலீசு தனிலிணங்க மொழிபெயர்த்தோன்

இந்நிலக் குடிமையு மிறைமையு முணர்த்
தொன்மை செய்கற் பொறிசொற் செப்பேடு
நன்னராய்ந்தவற்றையு நன்கு  மொழி பெயர்த்தோன்
புறைசய் வெற்கடம் புக்கவோர் காலத்
தரசுபுரி சென்னையிலாங் காகிருபத்தேழ்
கூவல்களோடறக் குளமுந் தொட்டோன்
இளையபெருங் குணமுடையோன்
தென்றிசை யாத்திரைச் செலவழி முகவையில்
சாலிவாகன சக மாயிரத் தெழுநூற்று
நாற்பத் தொன்றினுக்குக் கிரிஸ்துவின்
ஆயிரத் தொண்ணூற்றுப் பத்தொன்பதாமாண்டில்
ஏயமார்ச்சி யொன்பதினிற் சடிதியில்
அந்தோ நிலமகளழுது தலைவிரிக்க
அறமுதற் கடவுளடிப் பெருநிழல்பெற்
றுறு மிளைப்பாறியு வகையுற்றனனே

(தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு . விலை : ஐந்து காசுகள் – ஆண்டு இல்லை.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக