வியாழன், 12 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 1

பட்டினப்பாலை – அரிய செய்தி – 1
                                        காவிரி யாறு
வசியில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி
வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடற் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப். 1 – 7
காவிரியாறு, குற்றம் இல்லாத புகழினை உடையது. கீழ் வானில் விளங்கித்தோன்றும் வெள்ளி என்னும் கோள் மீன், தான் நிற்றற்குரிய திசையாகிய வடக்கின்கண் நில்லாமல், தெற்குத் திசை நோக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டால், நாட்டில் மழை பெய்யாது என்பர்.
நீர்த் துளிகளை உணவாக உண்டு வாழும் வானம்பாடிப் பறவைகள், உணவு வேண்டி, மேகங்களைச் சிறப்பித்துப் பாடும், அவை உணவின்றி ஏங்கித் தவிக்குமாறு மழை பெய்யாமல் பொய்த்த வறண்ட காலத்திலும், காவிரியாறு பொய்த்தலின்றி, நீர் நிறைந்து , குடகு மலையில் தோன்றிக் கடலை நோக்கிச் சென்றடையும். காவிரியாற்றின் தண்ணீர் எங்கும் பரவிப் பொன்னைத் தன் அலைகளாகிய கைகளால் கொழித்துக் கரையில் இடும்.
( வசை – குற்றம் ; வெண்மீன் – வெள்ளியாகிய மீன் ; திசை – தான் நிற்றற்குரிய வட திசை ; தளி உணவு – மழைத் துளியாகிய உணவு ;  புள் – வானம் பாடிப் பறவை ;வான்   மேகம் ; மலை – குடகு மலை.)
பி.கு. ‘ கரியவன் புகையினும் புகைக் கொடி தோன்றினும்
           விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
           காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை’ – சிலம்பு. 10: 102
ஈண்டு இளங்கோவடிகள் ” வாய்த்தலை”  ( நீரைத் தேக்கும் மதகு ) என்றது காவிரியின் குறுக்கே கரிகாலன் கட்டிய கல்லணையைக் குறித்து நின்றதைக் காண்க.
“ வனைகலந் திகிரியின் குமிழி சுழலும்
துனை செலல் தலைவாய் ஓ இறந்து ஒலிக்கும் – மலைபடு. 474 – 475
 சேயாறு  - ஆற்று நீர் வாய்த்தலை வழியாகக் குமிழ்த்து வரும் .
 தலைவாய் – வாய்த்தலை – மதகு.
“காவிரிப் புதுநீர் கடுவரல் வாய்த்தலை

ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே… ( சிலம்பு. 10 : 108) ஈண்டு வாய்த்தலை என்றது கல்லணை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக