ஞாயிறு, 1 மே, 2016

குறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 4

குறிஞ்சிப்பாட்டு -  அரிய செய்தி  : 4
தோழி அறத்தொடு நிற்றல்
இகல்மீக் கடவும் இருபெரு வேந்தர்
வினையிடை நின்ற சான்றோர் போல
இருபேர் அச்சமோடு யானும் ஆற்றவென்
கொடுப்பின் நன்கு உடைமையும் குடிநிரல் உடைமையும்
வண்ணமும் துணையும்பொரீஇ எண்ணாது
எமியேம் துணிந்த ஏமம் சால் அருவினை
நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணரச்
செப்பல் ஆன்றிசின் சினவாதீமோ
கபிலர், குறிஞ்சிப் .  27 – 34
தம்முள் மாறுபாடுகொண்டு மிக்குச் செயற்படும்  இரு பெரிய அரசர்களைச் சந்து செய்விக்கும் தொழிலை மேற்கொண்ட அறிவுடையாரைப் போல, உனக்கும், இவள் வருத்தத்திற்கும் அஞ்சுகின்ற இரு பெரிய அச்சத்தால் யானும் வருந்தாநின்றேன்.
இவளை, அவள் விரும்பிய தலைவற்கு மணம் முடித்துக் கொடுத்தபின்பு, எல்லாவற்றானும் இடையூறின்றி இனிது முடிதலையும், தனித்தனி ஒருகுடியாகாமல் இரண்டு குடியும் ஒத்து ஒரே குடியாய்ப் பொருந்துதல் உடைமையும் ;  குணத்தையும் சுற்றத்தின் உதவிகளையும் ஒப்பிட்டுப் பார்த்துப் பின்னரும் பலருடன் கலந்து உசாவாமல், நும்மையின்றித் தமியேமாய், யாங்களே துணிந்த, உயிர்க்குப் பாதுகாவலாய் அமைந்த, செய்தற்கரிய, இக்களவுமணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை நடந்தவாறு நீ நன்றாக அறிந்துகொள்ளும்படி நினக்குக் கூறுதல் அமைந்தேன், அதனைக் கேட்டுச் சினம் கொள்ளாதிருப்பாயாக.
 தலைவியால் விரும்பப்பட்ட தலைவற்கு மணம் முடித்துக்கொடுப்பதால், தலைவியின் இல்லற வாழ்வு எல்லா நிலைகளிலும் நன்றாக விளங்கும் என்றாளாக.
( இகல் – மாறுபாடு ; மீ – மிகுதி ; வண்ணம் – குணம் ; எண்ணாது – பலருடன் கூடி உசாவாது ; ஏமம் – பாதுகாவல் ;  அருவினை – செய்தற்கரிய களவு மணம் ; செப்பல் – சொல்லுதல்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக