சனி, 7 மே, 2016

குறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 10

குறிஞ்சிப்பாட்டு -  அரிய செய்தி  : 10
மாலைக் காலம்  ( அன்றில் – பாம்பு மணி உமிழ்தல்)
மான்கணம் மரமுதல் தெவிட்ட ஆன்கணம்
கன்று உயிர் குரல் மன்றுநிறை புகுதர
ஏங்குவயிர் இசைய கொடுவாய் அன்றில்
ஓங்குஇரும் பெண்ணை அகமடல் அகவ
பாம்புமணி உமிழ பல்வயின் கோவலர்
ஆம்பலம் தீம்குழல் தெள்விளி பயிற்ற
ஆம்பல் ஆயிதழ் கூம்பு விட வளமனைப்
பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி
அந்தி அந்தணர் அயர கானவர்
விண்தோய் பணவைமிசை ஞெகிழி பொத்த
வானம் மாமலை வாய்சூழ்பு கறுப்ப கானம்
கல்லென்று இரட்ட புள்ளினம் ஒலிப்ப
சினைஇய வேந்தன் செல்சமம் கடுப்பத்
துணைஇய மாலை துன்னுதல் காணூஉ
                                         கபிலர், குறிஞ்சிப் . 217 – 230
மான் கூட்டங்கள் மரங்களின் கீழ் திரண்டு கூடும் ; பசுக் கூட்டம் தம் கன்றுகளை அழைக்கும் ; ஊது கொம்பு போல் வளைந்த வாயினையுடைய அன்றில் பறவைகள், உயர்ந்த பெரிய பனையின் உள் மடலில் இருந்து தம் பேடுகளை அழைக்கும் ;  பாம்புகள் இரை தேடிச்செல்வதற்காகத் தம்மிடம் உள்ள மாணிக்க மணிகளை உமிழும் ; இடையர்கள் பல இடங்களிலும் நின்று ஆம்பல் என்னும் பண்ணினைத் தம் அழகிய இனிய குழலில் இசையை எழுப்புவர் ;  ஆம்பலின் அழகிய இதழ்கள் தளையவிழ்ந்து மலரும்; அந்தணர்கள் அந்திக்காலத்துச் செய்யும் கடன்களை இயற்றுவர் ; செல்வ மனைகளில் தொடி அணிந்த மகளிர் விளக்கு ஏற்றுவர் ;  காட்டில் வாழ்பவர் விண்ணைத்தீண்டும் பரண்களின் மேல் தீக்கடை கோலால் நெருப்பை உண்டாக்கி எரிப்பர். காட்டில் உள்ள விலங்களெல்லாம் கல்லென்ற ஓசையுடன் ஒன்றை ஒன்று அழைக்கும்;  பறவைகள் தம் கூடுகளிலிருந்து ஆரவாரம் செய்யும் ;  சினம் கொண்ட வேந்தன் படை நடத்திச் செல்லும் போர்க்களத்தைப் போல விரைந்த மாலைப் பொழுது வந்தது.
( தெவிட்ட – திரள ; பயிர் – அழைத்தல் ; மன்று – கொட்டில் ; வயிர் – ஊது கொம்பு ; பெண்ணை – பனை மரம் ; அகவ – அழைக்க ;  கொளுவி – கொளுத்தி ; ஞெகிழி – தீக்கடை கோல் ; இரட்ட – மாறி கூப்பிட.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக