திங்கள், 2 மே, 2016

குறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 5

குறிஞ்சிப்பாட்டு -  அரிய செய்தி  : 5
யானை முத்து
நெற்கொள் நெடுவெதிற்கு அணந்த யானை
முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்ப
துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குரல்
                                        கபிலர், குறிஞ்சிப் .  35 - 37
நெல்லைத் தன்னிடம்கொண்ட நெடிய மூங்கிலைத் தின்பதற்காகத் தன் தலையை மேல்நோக்கி உயர்த்தி நின்று வருந்திய யானை, அவ்வருத்தம் தீர்வதற்காகத் தன்னுடைய முத்துக்கள் நிறைந்த கொம்பின்மேல் துதிக்கையை இட்டுக்கொள்ளும். அதன் கொம்புகளுக்கிடையே தொங்குகின்ற துதிக்கையின் காட்சியைப்போலப்  பஞ்சு போன்ற, தலை வளைந்த, ஈன்றணிமை நீங்கிய பெரிய தினைக்கதிர்கள், தினைத் தாள்களுக்கிடையே காணப்படும்.
                முற்றிய மூங்கிலின் அரிசி, குறிஞ்சி நில மக்களின்  உணவு – யானை, மூங்கிலை விரும்பியுண்ணும் – முத்துக்கள் விளையும் இடங்களில் ஒன்றாக யானையின் மருப்பும் கூறப்படும்.
( வெதிர் – மூங்கில் ;  அணந்த – அண்ணாந்த ; மருப்பு ; கொம்பு ; இறங்குகை ; தொங்கவிடப்பட்ட துதிக்கை ; துய் ; பஞ்சு ; வாங்கிய – வளைந்த ; குரல் – கதிர்.  ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக