திங்கள், 23 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 12

பட்டினப்பாலை – அரிய செய்தி – 12
கடல் வாணிகம் - புகார் துறைமுகம்
செல்லா நல்லிசை அமரர் காப்பின்
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்
                 கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப்.184 – 193
                    கெடாத நல்ல புகழையுடைய தெய்வங்கள் துணைபுரிந்து பாதுகாப்பதால், வணிக வீதிகளின் செல்வம் அளவிடற்கரியதாயிற்று.
                     மரக்கலங்களில் ஏற்றபட்டுக் கடல் வழியாகக் காற்றின் துணையினால், நிமிர்ந்து செல்லும் கதியையுடைய, குதிரைகள் கொண்டுவரப்பட்டன.
                    கரிய மிளகுப் பொதிகளும், வடமலையாகிய மேரு மலையில் தோன்றிய மாணிக்க மணிகளும், சாம்புநதம் என்னும் பொன்னும், பொதிய மலையில் தோன்றிய சந்தனமும், அகில்கட்டைகளும் கீழ்த் திசைக் கடலில் விளையும் பவளங்களும், கங்கையாற்றைச் சார்ந்த பகுதிகளில் உற்பத்தியாகும் பொருள்களும், காவிரிக்கரைப் பகுதியில் விளையும் பொருள்களும், ஈழ நாட்டின் உணவுப் பொருள்களும், கடார நாட்டில் உண்டாகும் நுகர் பொருள்களும், சீனம் முதலிய பிற நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட கருப்பூரம், பன்னீர், குங்குமம் போன்ற பொருள்களும், இவை தவிர பெரிய பல பொருள்களும் நிலத்தின் முதுகு நெளியும்படி, நீர் வழியாகவும், நிலத்தின் வழியாகவும் புகார் நகரத்தில் விற்பனை செய்வதற்காகக் கொண்டுவரப்பட்டன.
              அப்பொருள்கள், புகாரின் கடற்பரப்பிலும் கரையிடத்தும் அழிவில்லாமல் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
( வடமலை – மேருமலை ; குடமலை – பொதியில் ; தென்கடல் ; தாமிரபரணி கடலொடு கலக்கும் பகுதி , கொற்கைத் துறை; குணகடல் – கீழ்த் திசைக் கடல் ; துகிர் – பவளம் ; வாரி – வருவாய் ; காழகம் – கடாரம் ; ஆக்கம் – நுகர்பொருள் ; பொன் னீ -  சாம்பூநதம் என்னும் வகை , மேருமலையின் தென்பாலுள்ள நாவல் மரத்தின் கனிச் சற்றிலிருந்து உண்டாகும் பொன்.  வடதிசை மாமலைச் சுடர்விடு பொன்னும் ‘ பெருங்கதை 1: 58: 33.  சாம்பு (பூ) நதம் – நால்வகைப் பொன்னுள் ஒன்று ; மேருமலைக்கு வடக்கிலுள்ள நாவற்சாறுள்ள ஆறு. த. த. அகரமுதலி , ப. 447. ஆய்க.) 

1 கருத்து: