வெள்ளி, 27 மார்ச், 2020

தன்னேரிலாத தமிழ்-23


தன்னேரிலாத தமிழ்-23
மக்கட் பேறு

கடவுட் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய
புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின்
நன்னராட்டி …. “ ------ அகநானூறு.

 தெய்வத்தன்மை பொருந்திய கற்புடன் குடிக்குச் சிறப்பினைத் தரும் மகனைப் பெற்ற நற்குணங்கள் நிரம்பிய இல்லத்தரசி.

ஒடுங்கு ஈரோதி ஒண்ணுதல் கருவில்
எண் இயல் முற்றி ஈரறிவு புரிந்து
சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும்
காவற்கு அமைந்த அரசு துறை போகிய
வீறுசால் புதல்வற் பெற்றனை…” --- பதிற்றுப்பத்து.

வேந்தே..! நின் மனைவியின் கருவில் பத்துத் திங்களும் நிரம்பி, பேரறிவை விரும்பி, அன்பும் நாணும் ஒப்புரவும் கண்ணோட்டமும் வாய்மையும் நடுநிலைமையும் உளப்படப் பிற குணங்களும் குடிகளைக் காத்தற்குப் பொருந்திய அரசின் துறைகளை முற்றக் கற்ற சிறப்புகளையும் உடைய புதல்வனைப் பெற்றனை.

இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை  உலகமும் மறுவின்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர் பயந்த செம்மலோர்….. ” ---- அகநானூறு.

பகைவரும் விரும்பும் குற்றமற்ற அழகுடைய மக்களைப் பெற்ற சிறப்புடையவர்கள், இவ்வுலகத்தே புகழொடு விளங்கித் துறக்க வாழ்வினையும் தப்பாது அடைவர்.

மகன் உரைக்கும் தந்தை நலத்தை ஒருவன்
 முகன் உரைக்கும் உள் நின்ற வேட்கை… “ --- நான்மணிக்கடிகை.

தந்தையின் இயல்புகளை மகனின் நடத்தை வெளிப்படுத்தும் ; மனத்தில் உள்ள எண்ணங்களை முகமே வெளிப்படுத்தும்.

1 கருத்து: