ஞாயிறு, 8 மார்ச், 2020

தன்னேரிலாத தமிழ்-8


தன்னேரிலாத தமிழ்-8

தமிழர்தம் வாழ்வியல் நெறி  அகம், புறம் என இருபெரும் பிரிவுகளைக் கொண்டதாகும்.

அகம் என்றதன் பொருளாவது...

“ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததால் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின் அதனை ‘அகம்’ என்றார். எனவே, அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகமென்றது ஓர் ஆகுபெயராம்.”

புறம் என்றதன் பொருளாவது...

இதனை, ”ஒத்த அன்புடையார் தாமேயன்றி எல்லார்க்குத் துய்த்துணரப்படுதலானும் இவை இவ்வாறிருந்ததெனப் பிறர்க்குக் கூறப்படுதலானும் அவை புறமெனவேபடும்.”

மேற்சுட்டிய அரும்பொருள்கள்வழி அறியப்பெறுவன, பொருள் இலக்கண விளக்கமும்  அகம் என்றதும் புறம் என்றதும் எத்தன்மையன என்று அறியின், உலகம் தட்டை என்ற காலத்துக்கு முன்னும் ; உலகம் உருண்டை என்னும் உண்மை அறிந்த காலத்துக்கு முன்னும் ;  உலகம் உருப்பெறாக் காலத்து, சூரியனின் இயக்க ஆற்றல் அறிந்து, உலகியல், வாழ்வியல், உளவியல் ஆகிய அறிவியல் துறகள் சார்ந்து நாடக வழக்கும் உலகியல் வழக்கும் ஆராய்ந்து தொல்காப்பியர் தோற்றுவித்த தொன்மை அறிவியல் கருவூலம் தொல்காப்பியம் என்க,

முதற்பொருள்

‘முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின்
இயல்பென பொழிப இயல்புணர்ந் தோரே.’

முதலென்று சிறப்பித்துக் கூறப்படுவது – நிலனும் பொழுதும் என்னும் இரண்டினது, இயற்கை நிலனும் இயற்கைப் பொழுதும் என்று கூறுப. இடமும் காலமும் இயல்பாக உணர்ந்த ஆசிரியர் என்றவாறு.

இயற்கையெனவே செயற்கை நிலனும் செயற்கைப் பொழுதும் உளவாயிற்று. நான்கு நிலன்னும் இயற்கை நிலனாம்; ஐந்திணைக்கு வகுத்த பொழுதெல்லாம் இயற்கையாம்.

இவ்வாறு அந்நூற்பாவின் பொருள் சிறக்க, தொல்காப்பியர் நிலத்தொடு(இடம்) பொழுதைச் சார்த்திக் கூறியிருப்பது அறிவியல்வழி ஆராய வேண்டிய ஒன்றாம். காலம் சார்பியலானது என்ற தொல்காப்பியர் கோட்பாடு, ஐன்ஸ்டின் கண்டுபிடித்த, காலம் சார்பானது என்னும் சார்பியல் கோட்பாட்டிற்கு முன்னுரையாக விளங்குவதை அறியமுடிகிறதல்லவா....?

சான்று
’காரு மாலையு முல்லை குறிஞ்சி
கூதிர் யாம மென்மனார் புலவர்.’ இது, முதலிரண்டனுள் நிலங்கூறிக் காலங் கூறுவான் முல்லைக்குங் குறிஞ்சிக்கும் பெரும்பொழுதுஞ் சிறுபொழுதுங் கூறுதல் நுதலிற்று. என்பர்.

ஈண்டு நிலனும் பொழுதும் முதல் என்றதும் அவற்றுள்ளும் நிலம் முதன்மைப் பெற்றிருப்பதும் நிலத்தோற்றத்தின் பிம் பொழுது அறியப்படுதலை உற்று நோக்குக. இஃது அறிவியல் சார்ந்த கருத்தாக்கம். இவ்வகையான கருத்தாக்கங்கள் பின்னாளில் அறிவியல் முறைப்படி ஆராய்ந்து மெய்ப்பிக்கப்படுகின்றன. அப்படித்தான் காலம் சார்பியலானது என்பதை 1905 ஆம் ஆண்டு ஆல்பெர்ட் ஐன்ஸ்டின்(1880-1952) கண்டுபிடித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக