திங்கள், 6 ஏப்ரல், 2020

தன்னேரிலாத தமிழ்-29 செய்ந்நன்றி அறிதல்


தன்னேரிலாத தமிழ்-29
செய்ந்நன்றி அறிதல்

செய்ந்நன்றி அறிதலும் சிற்றினம் இன்மையும்
இன்முகம் உடைமையும் இனியன் ஆதலும்
செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த.”சிறுபாணாற்றுப்படை.

நல்லியக்கோடனின் புகழுக்கு, அவனின்  செய்ந்நன்றி மறவாமையும் சிற்றினம் சேராமையும் இரவலர்மாட்டு இன்முகமுடைமையும் எவரிடத்தும் இனியனாம் தன்மையும் ஆகிய அருங்குணங்களே காரணம் என்று புகழ்வர் சான்றோர்.

நன்றி சாம் நன்றி அறியாதார் முன்னர்ச் சென்ற
 விருந்தும் விருப்புஇலார் முன்சாம் -அரும்புணர்ப்பின்
பாடல்சாம் பண்ணறியாதார் முன்னர் ஊடல் சாம்
ஊடல் உணரார் அகத்துநான்மணிக்கடிகை.

பிறர் செய்யும் நன்மைகளை, நன்மையெனத் தெரிந்துகொள்ளாதவர்பால் செய்ந்நன்றி கெடும் ; அன்பில்லாதவர்களிடத்தில் வந்த விருந்தினரும் வருந்துவர் ; பண் இசையை அறியாதவர்களிடத்தில் அரிய இசையுடைய பாடல்கள் கெடும் ; ஊடல் இனிமையைத் தெரிதல் இல்லாத கணவரிடத்தில் ஊடுதல் கெடும்.

கன்றாமை வேண்டும் கடிய பிறர் செய்த
  நன்றியை நன்றாகக் கொளல் வேண்டும் ….” --- நான்மணிக்கடிகை.
 பிறர்செய்த தீமைகளை மறத்தல் வேண்டும் ; பிறர் செய்த நன்மைகளைப் பெரிதும் நினைத்தல் வேண்டும்.


 செய்த நன்று உள்ளுவர் சான்றோர் கயம்தன்னை
வைததை உள்ளி விடும் ” – நாலடியார்.

சான்றோர்கள் பிறர் செய்த நன்மையை மட்டுமே நினைத்துக்கொண்டிருப்பார்கள் ; கயவர்கள் பிறர் தம்மை வைததை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பார்கள்.


  நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
 செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென
அறம் பாடிற்றே ஆயிழை கணவ .” ---- புறநானூறு.

நிலம் தலகீழாகப் பெயர்வதாயினும் ( உலகம் அழியும் காலத்தே தீவினைகள் அழியும் ஆயினும் அக்காலத்தும் ) ஒருவன் செய்த நன்றியை மறந்தவர்க்கு அத்தீவினையிலிருந்து உய்வதற்கு வழியில்லை என்று அறநூல் கூறும்.


1 கருத்து: