புதன், 20 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1169


திருக்குறள் -சிறப்புரை :1169

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா. ---- ௧௧௬௯

காதலரோடு  மகிழ்ந்திருந்த இரவுப் பொழுது மிகவும் குறுகியதாய் இருந்தது.  பிரிந்துசென்று கொடுமை செய்யும் காதலரைவிடக் கொடுமை செய்வதாக இரவுகள் உள்ளன. இப்பொழுதெல்லாம் இரவுக்காலம் நெடியதாய் நீண்டு கழிந்து போகிறது. 

இன் துணை நீ நீப்ப இரவினுள் துணையாகி
தன் துணை பிரிந்து அயாஅம் தனிக்குருகு உசாவுமே
ஒண்சுடர் ஞாயிற்று விளக்கத்தான் ஒளி சாம்பும்
நண்பகல் மதியம் போல் நலம் சாய்ந்த அணியாட்கு.” ---கலித்தொகை.

இனிய துணையாகிய நீ, இவளைவிட்டு நீங்கினை ; ஒளி பொருந்திய கதிர்களை உடைய ஞாயிற்றினது மிக்க ஒளியான் தன் ஒளி கெடுகின்ற உச்சிக்காலத்து மதிபோல் ஒளிநலம் அழிந்த முகத்தினை உடையாளுக்குத் தன் துணையைப் பிரிந்து வாழும் தனிக்குருகு நாரைபேடுதான் இரவினுள் இவளுக்கு உற்ற துணையாகி, இவள் நிலைபற்றிக் கேட்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக