வியாழன், 14 நவம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் –141 : 47. தமிழர் மருத்துவம்

தொல்தமிழர் அறிவியல் –141 : 47. தமிழர் மருத்துவம்

தமிழர் மருத்துவம் - மூலிகைகள் காப்புரிமை

                     தொன்மைக் காலத்தே இயற்கையோடு இயைந்து வாழ்ந்த சித்தர்கள் காடுகளிலும் மலைகளிலும் அலைந்து திரிந்து மரம் செடி கொடிகளின் அற்புத மருத்துவ ஆற்றல்களை ஆராய்ந்து அறிந்து மனிதனின் உடல் இயங்கியலுக்கு ஊறு விளைவிக்காத மருத்துவ முறை ஒன்றினைத் தோற்றுவித்தனர்.

                      இன்றைய மருத்துவ அறிவியல் வியந்து போற்றும் சித்தர் மருத்துவம் உயிர் காக்கும் பல அரிய மூலிகைகளை உலகிற்கு வழங்கியுள்ளது.

                        இன்று உலகத்தை அச்சுறுத்தும் ஒரு கொடிய நோயாக நீரிழிவு (சர்க்கரை நோய்) நோய் வளர்ந்து வருகிறது. இந்நோய்க்கு உரிய அரிய மருந்து பொங்கொரந்தி என்னும் மூலிகையாகும். நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரைச் சத்தை உறிஞ்சும் ஆற்றல் கொண்ட இந்த மூலிகையின் மதிப்புணர்ந்த சீன நிறுவனம் காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளதை அறிந்த பேராசிரியர் ஜி.பி. டூபே தமிழர்களின் அரிய சொத்தாகிய இம்மூலிகை தமிழ்நாட்டிற்குரியதென்று தமிழ் இலக்கியச் சான்றுகளையும் காட்டிக் காப்புரிமை பெற்றுச் சித்தர் மருத்துவத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். இன்னும் இது போன்ற எண்ணற்ற மூலிகைகளின் அருமை பெருமைகளை அறியாது நாம் இழந்து வருகிறோம் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

Salacia Oblonga - பொங்கொரந்தி
TNAU to take up mass production of anti – diabetes plants

                           “Salacia  Oblonga also called  Ponkoranti is a medicinal herb believed to be native to India and SriLanka. It is used to treat type 2 diabetes in ayurveda because it contains a molecule called Salacinol which prevents the body from absorbing the sugsr from foods consumed.
Recently Professor G.P Dubey won an international patent for the herb proving that it originated in India Salem district in Tamil Nadu to be specific.

                        “ I started the research into the plant when I heard a Chinese company applying to patent it. Then we managed to prove it through DNA finger printing and evidence in Tamil literature “ said Professor Dubey.”…………………… Times of India – 18/2/17.

நீரும் சோறும் மருந்து

ஆர்கலி வானம் தலைஇ நடுநாள்
கனைபெயல் பொழிந்தெனக் கானக் கல்யாற்று
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்
விருந்தின் தீம்நீர் மருந்தும் ஆகும்
தண்ணென உண்டு கண்ணின் நோக்கி
முனியாது ஆடப்பெறின் இவள்
பனியும் தீர்குவள் செல்க…..”
------நல்வேட்டனார். நற். 53: 5 – 11
                           வானுயர்ந்த பெரிய மலைப்பக்கத்தே மிக்க இடியுடன் மேகம் மழை பெய்யத் தொடங்கிற்று ; நள்ளிரவில் செறிந்து பெய்யும் மழையினால் கற்கள் நிரம்பிய காட்டுவழியே பெருகி ஓடும் ஆற்றிலே மரங்களிலிருந்து உதிர்ந்த சருகுகளும் பூக்களும் அடித்து வரப்பெறுகின்றன; அவ்வாறு பெருகிவரும் புத்தம் புதிய இனிய நீரானது  இவளுடைய நோயைத்  தீர்ப்பதாகும் ; அதனைக் குளிர்ச்சி பெறப்பருகி ஆண்டு இயற்கைக் காட்சிகளைக்கண்டு வெறுப்பின்றி நீராடினால் மேனி நடுக்கமும் தீரும் ஆதலால் அங்குச் செல்வீராக..!

இருமருந்து விளைக்கும் நல்நாட்டுப் பொருநன்
கிள்ளிவளவன் நல்லிசை உள்ளி
                                                ----கோவூர்கிழார். புறநா. 70: 9-10
                    நீரும் உணவுமாகிய இருமருந்தைப் பசிப்பிணிக்குத் தரும் நல்ல நாட்டை உடைய தலைவனாகிய கிள்ளிவளவன், அவனுடைய நல்ல புகழைக் கருதுவாய்…!
(பசிப்பிணி மருந்துமணி. 11.80.)-----தொடரும்…..

1 கருத்து: