சனி, 10 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1046


திருக்குறள் -சிறப்புரை :1046

நற்பொருள் நகுணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும். ----- ௧0௪௬

நல்ல நூல்கள் பலவற்றைக் கற்று அவற்றின் நுண்பொருளை, வறுமையுற்றோர் எடுத்துச் சொல்லினும் அவை கேட்பாரின்றிப் பயனற்றுப் போகும்.
ஏழை சொல் அம்பலம் ஏறாது.

“ பல் கனி நசைஇ அல்கு விசும்பு உகந்து
பெருமலை விடரகம் சிலம்ப முன்னி
பழனுடைப் பெருமரம் தீர்ந்தென கையற்று
பெறாது பெயரும் புள்ளினம் போல நின்
நசைதர வந்து நின் இசை நுவல் பரிசிலென்
வறுவியேன் பெயர்கோ வாள் மேம்படுந
ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லன்
நோய்இலை ஆகுமதி பெரும நம்முள்
குறுநணி காண்குவதாக ………” -----புறநானூறு.

 பல பழங்களையும் கொள்ளுதற்கு விரும்பித் தாம் வாழும் வானிடத்தே உயரப் பறக்கும் புள்ளினம் ; அப்புள்ளினம்பெரிய மலையின் முகையிடங்கள் எதிரொலிக்க முழங்கிச் சென்று, பழுத்த மரங்களை நாடும் போது, அம்மரங்கள் பழுத்து மாறிவிட்டமைக் கண்டு வருந்திப் பழம் பெறாமல் மீளுவதைப் போல, நீ என்னிடத்துக் கொண்ட விருப்பத்தை மனத்திற் கொண்டு உன் புகழைப் பாடும் பரிசிலன் ஒன்றுமில்லாமல் வறியேனாய் மீள்வதா..? நீ ஒரு பரிசிலும் கொடுக்கவில்லையாயினும் அதற்காக நான் வருந்த மாட்டேன். நீ நோய் இன்றி இருப்பாயாக..! உனது மகிழ்ச்சி மிக்க நாளவை நம்மிடத்து இருக்கும் நெருக்கத்தை இடைவெளியின்றி என்றும் காண்பதாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக