வியாழன், 1 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1037


திருக்குறள் -சிறப்புரை :1037

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும் . ----- ௧0௩௭

உழவர்கள் தம் நிலத்தை உழும் பொழுது கட்டிகளை நன்றாகத் தூளாகும்படி பலசால் உழுது, நன்றாக ஆறவிட்டுப் பின்னர் அந்நிலத்தில் விதைத்துப் பயிர்செய்தால் ஒரு கைப்பிடி எருவும் தேவைப்படாது ; பயிரும் செழித்து வளர்ந்து விளைச்சலும் மிகுதியாக இருக்கும்.

“வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவல்
கார்பெயல் கலித்த பெரும் பாட்டு ஈரத்துப்
பூழிமயங்கப் பல உழுது வித்திப்
பல்லி ஆடிய பல்கிளைச் செவ்விக்
களை கால் கழாலின் தோடு ஒலிபு நந்தி
மென்மயில் புனிற்றுப் பெடை கடுப்பநீடிக்
கருந்தாள் போகி ஒருங்கு பீள் விரிந்து
கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து
வாலிதின் விளைந்த புது வரகு……” ----புறநானூறு.

வெம்மை முதிர்ந்த வேங்கை மரத்தையுடைய சிவந்த மேட்டு நிலத்தே கார்காலத்து மழை பெய்தது. அம்மழையால் பதமாகிய ஈரநிலத்தில், புழுதி கலக்கும்படி பல சால்பட உழுது விதைக்கப்பட்டது. தாளியடிக்கப்பட்ட பல கிளைகளை உடைய செவ்வியின்கண் களையை அடியினின்றும் களைதலான், இலை தழைத்துப் பெருகி, மகவீன்ற மயிலினது பேடையை ஒப்ப ஓங்கி வளர்ந்தது. அதன் கரிய தண்டு நீண்டு, எல்லாம் ஒருங்கே சேர்ந்து சூல் விரிந்து, கதிரின் அடியும் தலையும் ஒழியாமல் வரகு மிகக் காய்த்துச் சீராக விளைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக