சனி, 24 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1056


திருக்குறள் -சிறப்புரை :1056

கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.---- ௧0

பிறருக்கு வழங்கும் அளவுக்கு மிகுபொருள் கொண்டோர், தம் பொருளை மறைத்து வைக்கும் குற்றம் இல்லாரைக் கண்டால், இரந்து வாழ்வோரின் வறுமைநோய் எல்லாம் ஒருங்கே அழிந்துபோகும். பிச்சைக்காரர்கள் இல்லாத நிலை உருவாகும் என்பதாம்.

“ இரவலர் புரவலை நீயும் அல்லை
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்
இரவலர் உண்மையும் காண் இனி இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண்…….” ----புறநானூறு.

தலைவனே…! இரப்போர்க்கு ஈந்து பாதுகாப்பாய் நீயும் அல்லை ; பொருள்தந்து பாதுகாக்கும் புரப்போர் இரப்போர்க்கு இல்லாமல் போய்விடவில்லை ; இனி இரப்போர் இருத்தலையும் காண்பாயாக ; இனி இரப்போர்க்குக் கொடுப்போர் உண்டாதலையும் காண்பாயாக.

1 கருத்து: