ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :531

திருக்குறள் – சிறப்புரை :531
பொச்சாவாமை
(களிப்பு மிகுதியால் சோர்வு கொள்ளாதிருத்தல்)
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு . ---- ௫௩௧
வெற்றியால் பெற்ற அளவுகடந்த உவகைக்களிப்பால் தோன்றும் மறதி, அளவுகடந்த கடுஞ்சினத்தால் விளையும் தீமையைக் காட்டிலும் கொடியது.
“ அமிழ்துபொதி துவர்வாய் அசைநடை விறலியர்
பாடல் சான்று நீடினை உறைதலின்
வெள்வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என
உள்ளுவர் கொல்லோ நின் உணராதோரே” – பதிற்றுப்பத்து.

வேந்தே..! வெற்றிக்களிப்பில் அமிழ்தம் போன்ற உமிழ் நீரையுடைய சிவந்த வாயையும் தளர்ந்த நடையையும் உடைய விறலியர், பாட்டுக்களைப் பாட, பாடல் மிகுதலின் அவற்றைக்கேட்டு அங்கேயே வெகுநேரம் தங்கினாய், அதனால் வெள்ளிய வேலையுடைய சேரன் ஐம்புல இன்பங்களுக்கு வயப்படுபவன் போலும் என்று நின் இயல்பை முழுமையாக உணராதவர்கள் நினைப்பார்களோ?   

1 கருத்து: