சனி, 9 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 646

திருக்குறள் – சிறப்புரை : 646
வேட்பதாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள். --- ௬௪௬
அவையோர் விருப்பத்தோடு கேட்குமாறு சுவைபடக் கருத்துரைத்து, கருத்துரையின் வன்மை மென்மைகளைப் பிறர் சொல்லும்போது அவற்றை ஆராய்ந்து தெளிதல் மாசற்ற நல்லோரின் கொள்கையாகும்.
“ நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து
வல்லார் ஆயினும் புறம் மறைத்துச் சென்றோரைச்
சொல்லிக் காட்டிச் சோர்வு இன்றி விளக்கி
நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கம்..” --மலைபடுகடாம்.

தாம் கற்றவற்றை வெளிப்படுத்தும் நாவன்மை மிக்க அறிவுடையோர் பலர் கூடிய அவைக்களத்தில், தாம் கற்றவற்றைப் பிறர் மனங்கொளக் கூறாரிடத்தும் அவர்தம் இயலாமையை மறைத்து --- இகழாது, எல்லோர் மனங்களிலும் பொருந்துமாறு பொருளுரைத்து, அவர்களை நன்றாக நடத்தும் இயல்பினர். இத்தகைய உயரிய ஒழுக்கமுடைய சான்றோர் சுற்றம் சூழ விளங்குவது நன்னன் அவைக்களம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக