செவ்வாய், 8 மார்ச், 2022

 

தன்னேரிலாத தமிழ் –407: குறள் கூறும்பொருள்பெறுக.


386


காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்.


மன்னனானவன், தங்குதடையின்றிக் குடிமக்கள் காண்பதற்கு எளிமை உடையவனாகவும் எவரிடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாகவும் இருப்பானேயானால்  அவன் ஆளும் நிலவுலகத்தார் யாவரும் அவனைப் புகழ்ந்து போற்றுவர்.


நாடெனப் படுவது நினதே யத்தை ஆங்க

நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே

நினவ கூறுவல் எனவ கேண்மதி

அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து

முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு

 உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே.” – புறநானூறு, 35.


நாடு என்று சொல்லப்படுவது நின்னுடைய  (சோழன் கிள்ளிவளவன்)

   நாடே ! அந் நாடு பொருந்திய செல்வத்தையுடைய பெருமை பொருந்திய வேந்தே  ! நினக்குச்  சில சொல்லுவேன் ; என்னுடைய  சொற்களைக் கேட்பாயாக ! அறக்கடவுள் விரும்பி ஆராய்ந்தாற் போன்ற, செங்கோலால்  ஆராயும் ஆராய்ச்சியையுடையயை,  நீதியைக் கேட்க வேண்டும்  காலத்துக் காட்சிக்கு எளியராய் வந்து நீதி வழங்கும் மன்னர், மழைத்துளியை விரும்பியவர்க்குப் பெருமழை கிடைத்தது போன்ற  பெருமை உடையவராவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக