சனி, 14 மார்ச், 2020

தன்னேரிலாத தமிழ்-13


தன்னேரிலாத தமிழ்-13
’கண்’டதும் காதல்..!

கண்ணொடு கண்ணிணை நோக்கின்.. வாய்ச் சொற்கள் பயனிலவாயினவாம்,
நோக்கு என்பதன் பொருளே ‘காதல் பார்வை’ என்பதாம்.

‘மாத்திரை முதலா அடிநிலை காறும்
நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே’ –

என்றார் தொல்காப்பியர். செய்யுள் இலக்கணம் கூறினாரெனினும் ஆன்றோர் நோக்கு என்னும் பார்வையைக் காதல் மொழியாகக் கொண்டுள்ளனர்.

காதல் பிறப்பது கண்கள் வழியே. ஆணும் பெண்ணும் நேரெதிர்பார்வையின் பரிமாற்றம் காதல் பிறக்கும் களமாகும்.

“எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண்ணினைக் கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும் நிலை ப்றாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.” 

எனக் கம்பர் கண்கள்வழிக் காதல் பிறந்த நிலையை எடுத்துரைப்பார்.

இந்நிலையைத் தொல்காப்பியர்…
‘ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றிஉயர்ந்த பாலது ஆணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோன் ஆயினும் கடிவரை யின்றே.’  
என்றதாவது ஒன்றுபடுத்தும் ஊழ்நிலையானும் வேறுபடுத்தும் ஊழ்நிலையானும் அமையும் வாழ்க்கையில் ஒன்றுதலைச் செய்யும் உயர்ந்த ஊழின் ஆணையால், ஒத்த தலைவனும் தலைவியும் காண்பர். தலைவன் மிக்கோன் ஆனாலும் நீக்கப்படல் இல்லை.

ஒன்றுபடுத்தும் ஊழ்நிலை என்றால் பருவம் வந்துற்ற ஆணும் பெண்ணும்  எதிர்பாராமல் எதிர்பட்ட பொழுது, கண்கள் நோக்கப் பருவ விழைவால் உணர்வு ஒன்றிடக் காதல் வயப்பட்டனர்.

‘நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக்
கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும்.’ 

–தலைமக்கள் இருவர் கண்களும், நாட்டத்தை வெளிப்படுத்தி, இருவரும் அறிவால் உடன்படுவதற்குத் துணையாய்ச் சேர்ந்து உரைக்கும் குறிப்புரையாக அமையும். என்று தொல்காப்பியர், உணர்வால் ஒன்றிய காதலர் அறிவால் உடன்படுவர்,நோக்கு எனும் குறிப்பால் கொண்ட இவ்வுடன்பாடு மெய்யின்கண் தோன்றி வெளிப்படுவதை…

‘குறிப்பே குறித்தது கொள்ளுமாயின்
ஆங்கவை நிகழும் என்மனார் புலவர்.’

 அஃதாவது, நாட்டங்கள் தாம் குறித்ததைக் கொண்டால் அடுத்து களவிற்குரிய ஒழுகலாறுகள் நிகழும் என்பார் அறிவுடையோர்.  
களவொழுக்க ஒழுகலாறுகள் ஆண், பெண் இயல்புகளுக்கேற்பப் பெருமை பெறும்.

களவொழுக்க உணர்வுகள்

1 கருத்து: