புதன், 2 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 13

பரிபாடல் – அரிய செய்தி - 13
மகன்றில் – நீர் வாழ் பறவை
ஆராக் காமம் ஆர்பொழிற் பாயல்
வரையகத்து இயைக்கும் வரையா நுகர்ச்சி
முடியா நுகர்ச்சி முற்றாக் காதல்
அடியோர் மைந்தர் அகலத்து அகலா
அலர் தருமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி
புலரா மகிழ் மறப்பு அறியாது நல்கும்
நல்லந்துவனார். பரிபா. 8 : 40 – 45
நுகர்ந்தது போதும் என்று எண்ணி அமையாத காம இன்பத்தினை – மலைச் சாரலில் நிறைந்த சோலைகளில் உள்ள பூம்படுக்கைகளில் தலைவரோடு கூட்டிவைத்த களவுப் புணர்ச்சியினையும் – திருமணம் செய்து கொண்டு தம் கணவரோடு வாழும் மகளிர் தம் கணவர் மார்பகத்தினைப் பிரியாமல் மலர்களில் திரியும் மகன்றில் பறவைகளின் நல்ல புணர்ச்சியைப் போன்ற – முதிராக் காதலோடு முடிவு பெறாத இன்ப நுகர்ச்சியினையும் மறவாமல் எப்போதும் காதலர்களுக்கு வழங்கும் சிறப்புடைத்து ( திருப்பரங்குன்றம் ) என்றான். ( மகன்றில் – “ பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன – நீருறை மகன்றிற் புணர்ச்சி – குறுந்.57. அன்றில் பறவையும் இத்தன்மைத்தே – அன்றில் – நிலப் பறவை ; மகன்றில் – நீர்ப் பறவை. )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக