புதன், 16 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 30

பரிபாடல் – அரிய செய்தி - 30
காமக் கூட்டம்
 தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும்
நாமத் தன்மை நன்கனம் படி எழ
யாமத் தன்மை இவ் ஐ இருங்குன்றத்து
இளம்பெருவழுதியார். பரிபா. 15 : 24 – 26
 மகளிரும் மைந்தரும் தாம் ஒருவரையொருவர் விரும்புதற்குக் காரணமான காமத்தை விதைத்து – அதன் பயனை விளைவிக்கும் கூதிர் யாமத்தைத் தனக்கு இயல்பாக உடைய -  இந்த வியக்கத்தக்க குன்றத்தின் கண்ணே….
( குறிஞ்சிக்கு யாமம் சிறுபொழுது ; கூதிர் – குளிர் – யாமம் – நள்ளிரவு – இதனால் ஆணும் பெண்ணும் கூடி மகிழ்தற்குரிய காலம் – புணரும் காலம் குறித்து அறிவியல் நோக்கில் – ஆய்க .)
இசைக் குறிப்புகள்
பண்ணிய இசையினர் - ஆலாபனம்
 – ”ஆளத்தியால் ஆக்கிய இசையை உடையோராய்” –( பரிபா. 17.)
”மகரத்தின் ஒற்றாற் சுருதி விரவும்
பகரும் குறினெடில்பா ரித்து – நிகரிலாத்
தென்னா தெனாவென்று பாடுவரேல் ஆளத்தி
மன்னாவிச் சொல்லின் வகை .”
முதலிற் பாடுமிடத்து மகரத்தின் ஒற்றாலே நாதத்தை உச்சரிக்கும் மரபு பகரில் பாரித்து முற்கூறிய நாதத்தினைத் தொழில் செய்யுமிடத்துக் குற்றெழுத்தாலும் நெட்டெழுத்தாலும் செய்யப்படும்.
 அவை அச்சு பாரணை என்று பெயர் பெறும்; அச்சுக்கு எழுவாய் குற்றெழுத்து பாரணைக்கு எழுவாய் நெட்டெழுத்து. அச்சு- தாளத்துடன் நிகழும் ; பாரணை- கூத்துடன் நிகழும்.
 ஆளத்தி செய்யுமிடத்துத் தென்னாவென்றும் – தெனாவென்றும் இரண்டசையும் கூட்டித் ”தென்னாதெனா” என்று பாடப்படும்; இவைதாம் –
” காட்டாளத்தி. நிறவாளத்தி. பண்ணாளத்தி. என மூன்று வகைப்படும் என்பார் அடியார்க்குநல்லார். இஃது இக்காலத்தே “ ஆலாபனம்” என்று வழங்கப்படும்.
பாலை அங்குரல் – பாலைப் பண்ணின் அழகிய இசை .
கிழமை நிறை குறை என்பன ஆளத்தியின் பாகுபாடுகள். இதனை “ இசைப் புலவன் ஆளத்தி வைத்த பண்ணீர்மையை முதலும் முறைமையும் முடிவும் நிறைவும் குறைவும் கிழமையும் வலிவும் மெலிவும் சமனும் வரையறையும் நீர்மையும் என்னும் பதினொரு பாகுபாட்டினாலும் அறிந்து “ என்பார் சிலம்பு உரையில் அடியார்க்குநல்லார்.
தாக்கு – இசைத் தொழில் எய்யனுள் ஒன்று ; எடுத்தல் படுத்தல் நலிதல் கம்பிதம் குடிலம் ஒலி உருட்டு தக்கு  என்னுமிவை இசைக் கிரியைகள்.
( மேலும் இசைக் குறிப்புகளைக் காண – பா. 19.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக