புதன், 3 அக்டோபர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -97
புனிதர் தாமசு அக்கினாசு (Saint Thomas Aquinas)
 கி.பி. 1225-1274
இடைக்காலம் :
சிந்தனையில் தேக்கம் நிலவியது. கிரேக்கத் தத்துவங்களைப் புதிய சொற்களில் வடித்தனர். மடாலயக் கல்வி முறை  (10 ஆம் நூற்றாண்டு) வளர்ந்தது. பல்கலைக் கழகங்களில் (இங்கிலாந்து,பாரிசு) தத்துவ விளக்கங்கள் ’புலமைத்துவம்’
 (Scholasticism) எனப் பெயர் பெற்றது.
 கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கல்விப் புரட்சி, பண்பாட்டுப் புரட்சியின் பலனாக அரிசுடாட்டிலின் ‘அளவையியல்’ தத்துவம் வளரலாயிற்று. இது கிறித்துவத்திற்கு எதிரான போதும் அதனைப் போற்றினர். அளவையியல் கல்வியும் பயிற்சியும் சிந்தனையைச் செழிக்கச் செய்தன. அரிசுடாட்டில் தத்துவத்திறகு வலிவும் பொலிவும் தந்தவர் அக்கினாசு.
அக்கினாசு 25 நூல்களை எழுதியுள்ளார். கிறித்துவ சமயத்தை அதன் வீழ்ச்சியினின்று காப்பாற்றியவர் இவரே. சமயமும் தத்துவமும் இரு வேறு களப்பரபுடையவை அவற்றை இயைந்து போகச் செய்வதோ ஒருங்கிணைப்பதோ இயலாத செயல் என்றும் கூறினார்.
இறையியல்
இறையியல் சுருக்கம் (Summa Theologica) நூலில்கடவுள் உண்டு என்பதற்கு  ஐந்து நிரூபணங்களைத் தந்துள்ளார். கடவுள் இயக்கப்படாத இயக்கி. தனக்குத்தானே இயக்கமுடையவராகவும் பிறவற்றையெல்லாம் இயக்கும் ஆற்றல் உடையவராகவும் இருக்கிறார் என்று விரித்துரைத்தார்.
இறைமை வாழ்வு
 மானிட வாழ்வின் முடிந்த பயன் இறைவனுடன் ஒன்றி வாழ்வதே –இறைவன் அருளால்தான் இந்நிலை கிட்டும். இறைவனை அறியும் அறிவே தலையாய அறிவு. ஆன்மா உலகியல் நிலைக்கு அப்பாற்பட்டது ; உடல் ஆசைகள் உலகியல் சார்ந்தவை. ஆன்மாவின் ஆசையும் வேட்கையும் உலகியல் கடந்த நிலையிலேதான் நிறைவுறும்.
இவரின் தத்துவக் கருத்துகள் அரிசுடாட்டிலின் கருத்துகளை அடியொற்றியவையே.-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக