வெள்ளி, 24 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 25

மலைபடுகடாம் – அரிய செய்தி : 25
வழங்க மனமின்றி மறைந்தோர் பலர்
உயர்ந்த கட்டில் உரும்பில் சுற்றத்து
அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து
இலம் என மலர்ந்த கையர் ஆகி
தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்
நெடுவரை இழிதரு நீத்தம் சால் அருவிக்
கடுவரல் கலிழிக் கட்கு இல் சேயாற்று
வடுவாழ் எக்கர் மணலினும் பலரே
                       பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு. 550 – 556
 உயர்ந்த அரசுரிமையினையும் கொடுமையில்லாத அமைச்சர் முதலிய உரிமைச் சுற்றத்தாரையும் அகன்ற நாட்டினையும் சுருங்கிய அறிவினையும்  தம்மை நாடி இரந்து வந்தவர்க்கு, யாம் இல்லேம், எனக்கூறி, இல்லை என மறித்த கையினையும் உடையராய்த் தம் பெயரை உலகில் நிலைபெறச் செய்யாமல், தம்முடன் அழியுமாறு கெடுத்துச் சென்ற அரசர், நெடிய மலையிலிருந்து குதித்து விழும் பெருக்கு நிறைந்த அருவியின் கடிது ஓடிவரும் வெள்ளம் பெருகிவரும் கண்ணுக்கு இனிய சேயாற்றின், அறல் தொகுக்கப்பட்ட மணல் மேடுகளில் உள்ள மணலினும் பலராவர்.
(உரும்பு – கொடுமை ; தாயம் – உரிமை ; நீத்தம் – வெள்ளம் ; கலுழி – நீர்ப் பெருக்கு ; எக்கர் – மணல் மேடு. ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக