வெள்ளி, 3 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 4

மலைபடுகடாம் – அரிய செய்தி : 4
நன்னன் சேய் நன்னன்
முனைபாழ் படுக்கும் துன்னருந் துப்பின்
இசைநுவல் வித்தின் நசைஏர் உழவர்க்குப் 
புதுநிறை வந்த புனலம் சாயல்
மதிமாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி
வில்நவில் தடக்கை மேவரும் பெரும்பூண்
நன்னன் சேய் நன்னன் …… ….
                 பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு.   59 – 64  
                           பகைப் புலத்தைப் பாழ்படுத்தும் கிட்டுதற்கரிய வலிமையை உடையவன். தாம் பிறரைப் பாராட்டிக் கூறும் புகழ் என்னும் விதையைக் கொண்டு, பிறர் தரும் பரிசுப் பொருள்களை விரும்புதலாகிய சொல்லேர் உழவினால் பயன் பெறும் பரிசிலர்க்குப் புதுப் பெருக்காய் வரும் நீர் போன்ற அழகிய மென்மை உடையவன்.
                       தனது அறிவின் ஆக்கத்திற்கு மாறாகிய கேட்டினை நினையாமல், ஆக்கத்தையே உணர்கின்ற நினைவினை உடையவன்.  வில் தொழில் பயின்ற பெரிய கையையுடையவன், பொருந்துதல் உடைய பேரணிகலன்களை அணிந்தவன்.  இத்தகைய சிறப்புகளை உடையவன் நன்னன் சேய் நன்னன்.
                          மக்களுள் பெண்பாலரைப் பாடுங்கால், கணவரொடு சார்த்திப் பாடப்படும் சங்க கால மரபு, ‘ மங்கையர் கணவன் ‘  என்ற தொடரால் புலப்படும்.
( மதி மாறு – அறிவின் ஆக்கத்திற்கு மாறாகிய கேடு.)  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக