வியாழன், 11 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 761

77. படை மாட்சி
திருக்குறள் – சிறப்புரை : 761
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையு ளெல்லாம் தலை. --- ௭௬௧
ஆற்றல்மிக்க படைக்குரிய உறுப்புகள் எல்லாம் ஒருங்கே அமையப்பெற்று, போர்க்களத்தில் ஏற்படும் இடையூறுகளுக்கு அஞ்சாது, பகையை வெல்வதாகிய படையே வேந்தனின் செல்வங்களுள் எல்லாம் சிறந்த செல்வமாகும்.
“ ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்அம் குமரியொடு ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே.” –பதிற்றுப்பத்து.

ஆரியர் உறையும் அமைதி நிறைந்த இமயமலைக்கும் தென் திசையில் விளங்கும் அழகிய குமரிக்கும் இடைப்பட்ட நிலத்தே ஆளும் மன்னர்களுள் செருக்கித்திரிவோரைப் போரிட்டு அழித்து வென்றவனே இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக