செவ்வாய், 19 ஜனவரி, 2016

பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 6

பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 6
பொருநராற்றுப்படை -  கரிகால்பெருவளத்தானை முடத்தாமக்கண்ணியார் பாடியது .

காவிரியில் கல்லணை
கருவி வானம் கடற்கோள் மறப்பவும்
பெருவறன் ஆகிய பண்புஇல் காலையும்
நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும்
துறைதுறை தோறும் பொறை உயிர்த்து ஒழுகி
நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பு அகம்புகு தொறும்
புனலாடு மகளிர் கதுமெனக் குடைய
கூனி குயத்தின் வாய்நெல் அரிந்து
சூடு கோடாகப் பிறக்கி நாள்தொறும்
குன்றுஎனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்கும்
சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாக
காவிரி புரக்கும் நாடுகிழ வோனே
முடத்தாமக்கண்ணியார். பொருந. 2 :  236 – 248
சோழ நாட்டில் – கடுங்கோடையில் பயிர்கள் கருகவும் – அருவி நீர் இல்லாது ஒழியவும் - முகில்கள் கடல் நீரை முகத்தலை மறந்தொழியவும் – இவற்றால் பெரிய வற்கடம் (பஞ்சம்) உண்டாகும் . அத்தகைய காலத்தும் நறைக்கொடியும் நரந்தம் புல்லும் அகிலும் சந்தனமுமாகிய சுமைகளைச் சுமந்து கொணர்ந்து அவற்றை நீர்த்துறைதோறும் இட்டு – இளைப்பாறிப் பின் மேலும் நடந்து செல்லும் இயல்புடையது காவிரி – நுரையைத் தலையிலேயுடைய ஆரவாரம் பொருந்திய தன் வெள்ள நீர் கரை சூழ்ந்த குளங்களிலும் – பிற நீர்நிலைகளிலும் புகுந்தொறும் – நீர் விளையாடலை விரும்பும் மகளிர் விரைந்து சென்று அவற்றில் குடைந்து விளையாடுவர்- உழத்தியர் தம் உடல் வளைந்து குனிந்து நின்று அரிவாளால் முதிர்ந்து விளைந்த நெற்றாளை அரிந்து – தாள் அரிந்து திரட்டிய சூட்டினைச் சுமையாகக் கட்டிக்கொண்டுபோய் மலையாகப் போராக்கி – நாள்தொறும் கடா விட்டு (பிணையலடித்து) மலையெனக் குவிப்பர் – அள்ள அள்ளத் தொலையாத அந்நெற்பொலி நன்கு தைத்த மூடைகளிலே குதிர் முதலியவற்றில் இடமின்மையால் யாண்டும் கிடக்கின்ற செந்நெல் விளைகின்ற வரம்பு கட்டப்பட்ட  - ஒரு வேலி நிலம் ஆயிரங்கல நெல் விளையும்படி காவிரியாற்றால் வளமாக்கப்படுகின்ற நாடு முழுவதும் தனக்கே உரிமையுடையதாய தன்மையன் கரிகாலன்.
 ( எல்லை – பகல் ; பல்கதிர் பரப்பி – கோடைக் காலம் ; குல்லை -கஞ்சங்குல்லை – கஞ்சா செடி : புரத்தல் – உயிர்களை ஓம்புதல் ;  நறை – நரந்தம் – மணமுடைய கொடி – புல் .) தொடரும்…….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக