ஞாயிறு, 24 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…41.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…41.

ஒளவையார் இயற்றிய நல்வழி.

மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி

இரந்தழைப்பார் யாவரும் இங்கில்லை – சுரந்த அமுதம்

கற்றாதரல் போல் கரவாது அளிப்பரேல்

உற்றார் உலகத்தவர்”

 

உலகத்தார் அனைவரும் உறவினர் ஆவாரே….!

 

மரத்தில் பழம் பழுத்தால். வெளவாலை யாரும்  கூவி அழைக்காமல் அது தானே மரத்தை வந்து சேரும். பசு மாடு தன்னிடம் உள்ள பாலை ஒளிக்காமல் கொடுப்பது போல் தம்மிடம் உள்ள பொருளை ஒளிக்காமல் இல்லார்க்கும் இயலாதவர்க்கும் கொடுப்பவர்களுக்கு  உலகத்தார் எல்லோரும் உறவினர்கள் ஆவர்.

 

“ இன்னோர்க்கு என்னாது என்னொடும் சூழாது

வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்

எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே.” – பெருஞ்சித்திரனார், புறநானூறு; 163.

 

 என் இனிய துணைவியே..! குமணன் எனக்கு அளித்த செல்வத்தை இன்னார் இனியார் என்று பாராது, என்னையும் கேட்காது, நாம் மட்டுமே வளமாக வாழவேண்டும் என்று பாதுகாத்து வைத்துக் கொள்ள நினையாது எல்லோர்க்கும் வழங்கி மகிழ்வாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக