வெள்ளி, 10 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 11

மலைபடுகடாம் – அரிய செய்தி : 11
பாம்புகள் வாழிடம்
நளிந்துபலர் வழங்காச் செப்பம் துணியின்
முரம்பு கண் உடைந்த பரல் அவற் போழ்வில்
கரந்து பாம்பு ஒடுங்கும் பயம்புமார் உளவே
குறிக் கொண்டு மரங்ங் கொட்டி நோக்கி
செறிதொடி விறலியர் கைதொழூஉப் பழிச்ச
வறிது நெறி ஒரீஇ வலம் செயாக் கழிமின்
      பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு.  197 – 202
செறிந்து பலரும் போகாத வழியில் போகத் துணிவீராயின், அவ்விடம் மேட்டு நிலம் பிளந்ததால் ஏற்பட்ட, பரற்கற்களையுடைய பள்ள நிலத்தில் உண்டாகிய வெடிப்புகளில் பாம்பு மறைந்து கிடக்கும் குழிகளும் உள்ளன. அக்குழிகளை மனத்தால் குறித்துக் கொண்டு, விலங்குகளிலிருந்து தப்புவதற்கு மரங்களில் ஏறி கொட்டிப்பார்த்து, செறிந்த வளையலையுடைய விறலியர், அப்பாம்புகள் மனம் மகிழும்படி, கையால் தொழுது வாழ்த்த, விலங்குகள் வதியும் வழியைச் சிறிது அகன்று போய், வலப்பக்கத்து வழியை நுமக்கு வழியாகக் கொண்டு செல்வீராக..
  விலங்குகளின் இருக்கையை மரங்களில் ஏறி ஒலி எழுப்பி அறிவர். பாம்புகளைக் கொல்லாமல் கைதொழுது வழிபடும் மரபு சுட்டப்பட்டுள்ளது. விலங்குகளால் நேரும் ஏதத்தின் நீங்குவதற்கு அவை செல்லும் பாதையில் குறுக்கிடாமல் அகன்று செல்லல் வேண்டும். – ஆய்க.
( செப்பம் – வழி ; முரம்பு – பருக்கைக் கல்லாகிய மேட்டு நிலம் ;  பயம்பு – குழி ; பழிச்ச – வாழ்த்த ; வறிது – சிறிது . )

1 கருத்து:

  1. விலங்குகள் வதியும் வழி என்றால் விலங்குகள் வசிக்கும்வழி என்று பொருளா?

    பதிலளிநீக்கு