சனி, 4 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 5


மலைபடுகடாம் – அரிய செய்தி : 5
நன்னன் சேய் நன்னனின் – அவைக்களம்
பலர் புறங்கண்டு அவர் அருங்கலம் தரீஇ
புலவோர்க்குச் சுரக்கும் அவன் ஈகை மாரியும்
இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும் புகழுநர்க்கு
அரசு முழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு
தூத்துளி பொழிந்த பொய்யா வானின்
வீயாது சுரக்கும் அவன்நாள் மகிழ் இருக்கையும்
நல்லோர் கிழீஇய நா நவில் அவையத்து
வல்லார் ஆயினும் புறம் மறைத்து சென்றோரைச்
சொல்லிக்காட்டி சோர்வு இன்றி விளக்கி
நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும்
                  பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு.  71 - 80

கெடாத நல்ல புகழினை உலகம் உள்ளளவும் நிலைபெற்று நிற்குமாறு பகைவர் பலரையும் புறமுதிகிட்டு ஓடுமாறு செய்து,அவர்கள் திறையாகத் தந்த பெறுதற்கரிய பேரணிகலன்களை முதலில் அறிவுடையோர்க்குக் கொடுத்துப் பின்னர் அவர்கட்குப் பொன் மழைபோல் பரிசுகளையும் வரையாது வழங்குபவன்.
 தன்னை இகழ்ந்த பகைவரை அவர்தம் அரசு கெடாமல் பிணிக்கும் அறிவின் வலிமையுடையவன்.
 புலவர், சூதர், மாகதர், பாணர், கூத்தர் முதலாகத் தன்னைப் புகழ்ந்து கூறுவார்க்குத் தான் புறம் கண்ட பகைவர் அரசினை முழுமையாகக் கொடுத்தவழியும் அமைதியடையாத அறிவுடன், தூய துளியை மிகுதியாகச் சொரியும் பருவம் பொய்யாத மேகம், பின்னரும் பெய்யுமாறு போலப் பின்னரும் மாறாமல் கொடை வழங்க  நாளோலக்கத்தில் அமர்ந்திருப்பான்.
   தாம் கற்றவற்றை நாவினால் வெளிப்படுத்த வல்ல நல்ல அறிவினையுடையோர் பலர், நன்னன் அவைக்களத்தில் திரண்டிருப்பர். அவர்கள், அரசன் அவையை நாடிவரும் அறிவுடையோரிடம் தாம் கற்றவற்றை மனம் கொள்ள  கூறமட்டாராயினும், மட்டாமையை மறைத்துப் பொருளைச் சொல்லொஇக்காட்டுவதன் மூலம், அதனைத் தப்பின்றாக எல்லோர் மனங்களிலும் பொருந்துமாறு அறிவித்து,  அவையை நன்றாக நடத்தும் இயல்பினர். இத்தகைய உயரிய ஒழுக்கத்தை உடைய கற்றோர் சூழ விளங்குபவன்.
( ஈகை – பொன் ; பிணித்தல் – வயப்படுத்தல் ; நாள் மகிழ் இருக்கை – நாளோலக்கம் ; நா நவில் நல்லோர் – கற்றவற்றை விளங்கக் கூறும் அறிவுடையோர்.) 

1 கருத்து:

  1. ரசித்தேன். பொருளில் இரண்டாவது வரியில் புறமுதிகிட்டு என்றுள்ளது. புறமுதுகிட்டு என்று நினைக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு