புதன், 12 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1316


திருக்குறள் -சிறப்புரை :1316

உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள். ---- ௩க௫

பிரிந்திருந்த காலத்தில் உன்னையே நினைத்திருந்தேன் என்றேன், அவளோ, மறந்தால்தானே நினைக்க முடியும், என்னை ஏன் மறந்தீர்..?என்று, என்னைத் தழுவ வந்தவள் ஊடல் கொண்டு விலகி நின்றாள்.

செய்வினைக்கு அகன்ற காலை எஃகுற்று
இருவேறாகிய தெரிதகு வனப்பின்
மாவின் நறுவடி போலக் லாந்தொறும்
மேவல்தண்டா மகிழ் நோக்கு உண்கண்
நினையாது கழிந்த வைகல் எனையதூஉம்
வாழலென் யான் எனத் தேற்றிப் பன்மாண்
தாழக்கூறிய தகைசால் நன்மொழி
மறந்தினிர் போறிர் எம்மெனச் சிறந்த நின்
எயிறுகெழு துவர் வாய் இன்னகை அழுங்க
வினவல் ஆனாப் புனையிழை கேள் இனி
……… ……….  ……….. ……
 எள்ளல் நோனாப் பொருள் தரல் விருப்பொடு
நாணுத் தளையாக வைகி மாண்வினைக்கு
உடம்பாண்டு ஒழிந்தமை அல்லதை
மடங்கெழு நெஞ்சம் நின்னுழை யதுவே.” ---அகநானூறு.

பொருள் தேடிப் பிரிந்த காலத்தில், கத்தியால் அறுக்கப்பெற்று இரு பிளவாகிய வனப்புடைய மாவின் நறிய வடுப்போலக் காணுந்தொறும் களிப்பு மேவுதல் குறையாத பார்வையுடைய மையுண்ட கண்களையுடைய அவள்,  என்னை  நினையாது ஒழிந்த நாளில்,  யான் சிறிதும் உயிர் தரித்திரேன் எனத் தெளிவித்துப்  பல பெருமைகளும் சிறந்து விளங்கும் அவளின் அழகுமிக்க நல்ல மொழியை…..
 எம்மிடத்து மறந்துவிட்டீர் போலும் என்று சிறந்த நினது பற்கள் விளங்கும் பவளம் போன்ற வாயின் இனிய நகைகெட, வினவுகின்றாய், இப்பொழுது யான் கூறுவதைக் கேட்பாயாக,  பிறர் இகழ்தலைப் பொறாது, பொருள் ஈட்டி வரும் விருப்பத்துடன் தொடங்கிய வினையை முடிக்க வேண்டி, மானமே தளையாகக் கட்டுண்டிருந்து, சிறந்த வினையின் பொருட்டு, என் உடம்பு ஆங்குப் பிரிந்து நின்றதே அல்லாமல் அறியாமை உடைய என் நெஞ்சம் நின்னிடத்தேயாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக