சனி, 15 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1323


திருக்குறள் -சிறப்புரை :1323

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னா ரகத்து. ---- ௩உ ௩

செம்மண் நிலத்துப் பெய்த மழை நீரைப்போலத்  தலைவன் தலைவியின்  அன்புடைய நெஞ்சங்கள் இரண்டும் தம்முள் தாமே கலந்து ஒன்றினார்தம் ஊடலில் தோன்றும் கூடல் இன்பத்தைப்போன்ற இன்பம், துறக்க உலகத்திலும் உண்டோ..? இல்லையே என்பதாம்.

விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
அரிதுபெறு சிறப்பின் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கின் சாலாவே
பூப்போல் உண்கண் பொன்போல் மேனி
மாண்வரி அல்குல் குறுமகள்
தோள்மாறு படூஉம் வைகலொடு எமக்கே.”

விரிந்த அலைகளை உடைய பெரிய கடலால் சூழப்பெற்ற இப்பூவுலக இன்பமும் பெறுதற்கரிய சிறப்புகளை உடைய வானுலக இன்பமும் ஆகிய இரண்டனையும் தாமரைப் பூப்போன்ற, மையுண்ட கண்களையும் பொன்னைப்போன்ற நிறத்தினையும் அழகிய வரிகளை உடைய அல்குலையும் உடைய தலைவியினுடைய தோளொடு தோள் மாறுபடத்துயிலும் அரைநாள் இன்பத்தொடு ஒருங்கு வைத்து நிறைகாணின், எமக்கு அவை  ஒத்த அன்பினால் எய்தும் இன்பத்திற்கு இணையாகாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக