சனி, 15 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1322

திருக்குறள் -சிறப்புரை :1322

ஊடலில் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும். ----- ௩உ ௨

ஊடலிலினால் விளையும் சிறு பிணக்கும் துன்பம்தருதலோடு, காதலர் காட்டும் அன்பும் குறைவது போல் தோன்றினும் அன்பு வளர்ந்து,  ஊடல் கூடலாக மலர்ந்து  பெருமை பெறும்.

மெல்லிய லோயே மெல்லிய லோயே
நல்நாண் நீத்த பழிதீர் மாமை
வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின்
சொல்ல கிற்றா மெல்லியலோயே
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே
நாள் இடைப்படாஅ நளிநீர் நீத்தத்து
இடிகரை பெருமரம் போல
தீதில் நிலைமை முயங்குகம் பலவே.” ---குறுந்தொகை.

மெல்லிய இயல்புடையவளே….! பிறப்புடன் வளர்ந்த நல்ல நாணத்தை நீத்தமையால் தோன்றிய அலரும், மாமை நிறம் தீர்தலும் ஆகியவற்றை அறிந்த தலைவன்,  வற்புறுத்திக் கூறித் தெளிவித்ததால் பொறுத்துக் கொண்டிருப்பதல்லது அவற்றால் ஆகிய ஆற்றாமையைக் காமம் அறியாத இளைஞரும் காமத்தைத் துறக்க விரும்பும் பெரியோரும் உள்ள ஊர்க்குக் கூறினால் சொல்லும் சொற்களும் குறைந்து இல்லாமல் போகும். செறிந்த நீர்ப் பெருக்கத்தினை உடைய குளத்தின் நீர் மோதுகின்ற கரையில் உள்ள பெரிய மரத்தினைப்போல தீமை இல்லாத இல்லற நெறியில் நின்று, இனித் தலைவனைப் பலமுறை அணைத்து இன்புறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக