திங்கள், 17 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1327


திருக்குறள் -சிறப்புரை :1327

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும். ----- ௩உ ௭

உள்ளம் ஒருமித்த காதலர் இருவருள், ஊடலில் தோற்றவரே வென்றவர் ஆவார்;  அஃது அவரால், அப்பொழுது அறியப்படாமல் போயினும் பின்னர்க் கூடலில்  புலப்படும்.

நான்மறை விரித்து நல்லிசை விளக்கும்
வாய்மொழிப் புலவீர் கேண்மின் சிறந்தது
காதற் காமம் காமத்துச் சிறந்தது
விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி
புலத்தலின் சிறந்தது கற்பே…” ---பரிபாடல்.

வடமொழியில் அமைந்த நான்கு வேதங்களையும் விரிவாகப்பாடி அவற்றின் பொருளை விளக்குகின்ற வாய்மொழியாகிய வேதத்தில் வல்ல புலவர்களே..!  நாங்கள் சொல்கின்ற சிறந்த பொருளைக் கேட்பீராக..! காம ஒழுக்கத்தில் சிறப்புடையது, காதலை (களவு) உடைய காமமேயாகும். காதலை உடைய காமம் என்பது முன்னர் உடம்பினால் எந்த உறவும் இல்லாத ஒருவர், தம்முள் எழுந்த அன்பு ஒன்றினாலேயே உள்ளம் ஒத்து, ஊழ் கூட்டுவிக்கத் தாமே தம்முள் கண்டு காதல்கொண்டு புணர்தலாகிய மெய்யுறு புணர்ச்சியாகும். கற்பொழுக்கம் ஊடுதலால் சிறப்புடையதாகும்.
(காமங்களுள் சிறந்தது காதல் காமம்; காதல் இல்லாத காமமாவன ; கைக்கிளையும் பெருந்திணையும் பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கமும் முதலியன என்க , இவற்றைக் காமக் காமம் என்ப.)

1 கருத்து: