திங்கள், 24 ஜூன், 2019


பழந்தமிழர் அறிவியல்

நெடுந்........................தொடர்.....!

முன்னுரை

என்னுரை
    தமிழன் விஞ்ஞானியாக வாழவளர கலை இலக்கியங்களின் அடித்தளத்தை அறிந்துகொள்ள வேண்டும். மாணவர்களுக்கு அளிக்கப்படும் மந்தைக் கல்வி முறை மாற்றப்பட வேண்டும். அறிவியல் அறிஞர்கள் ஆசிரியர்கள் தாம் கற்ற கல்வியைபெற்ற அறிவை மக்களுக்கும் மாணவர்களுக்கும் தாய்மொழியில் வழங்கவேண்டும். மக்களுக்கான கல்வி என்பது வெறும் ஐந்து விழுக்காடு ஆங்கில அறிவு உடையவர்களைக் குறிக்காது.

                    நாம் நமது முன்னோர்களின் அறிவுச் செல்வத்தைச் சூதாடித் தொலைத்துவிட்டோம். அவர்தம் அறிவியல் சிந்தனைகளைக் கண்டுபிடிப்புகளாக்கி உலகுக்கு வழங்கத் தவறிவிட்டோம். சர் ஐசக் நியூட்டன்  – “ நான் கண்டுபிடித்தவையெல்லாம் எனது முன்னோர்களின் தோள் மீது ஏறி நின்று கண்டவையே…!” என்று கூறினார். அப்படித்தான் நாமும் நமது முன்னோர்களின் தோள் மீது ஏறி நின்று அறிவை விரிவு செய்ய வேண்டும்.
அறிவியல் இரு வகைப்படும்-
1. அக அறிவியல்
2.புற அறிவியல்.
அக அறிவியல்:
                                   மனித சமுதாயத்தின் அகவாழ்க்கைச் சார்பானது
மண்ணில் நல்ல வண்ணம் மக்கள் வாழ்வதற்கான நெறிமுறைகளைக் கூறுவது; இப்படித்தான் வாழவேண்டும் என்பதை வரையறுத்துக்கூறுவது.
பிறப்பால் பேதமுறாது; வளர்ப்பால் வழி தவறாது; இல்லறத்தால் உறவு மாறாது..!
  யாதும் ஊரென யாவரும் உறவென இயற்கையோடியைந்து வாழ வற்புறுத்துவது.
 வளமான வாழ்க்கை நலமுடன் விளங்க ஓரறிவு முதல் ஆறறிவு ஈறாக அனைத்து உயிர்களும் இயற்கை அன்னையின் மடியில் இன்புற்று இயைந்திருக்கஇயங்க அறம் பல வகுத்துரைப்பது.
                             அக அறிவியலின் அடிப்படை ஒழுக்கமுடைமையே. ஒழுக்கமின்றி மனித சமுதாயம் வாழமுடியாது ; வாழவும் கூடாது இஃது எக்காலத்திற்கும் பொருந்தும் அறிவியலாகும். ஒருவன் ஒருத்தி எனும் கற்பொழுக்க வாழ்க்கைமுறைப் புற அறிவியல் வளர்ச்சியால் புறந்தள்ளமுடியாத அக அறிவியலாம்.
                                பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்தையும் தனிமனிதத்தன்மை சார்ந்தும் சமுதாயம் சார்ந்தும் வாழ்வியலின் அனைத்து நிலைகளையும் அறிவியல் நோக்கில் ஆராய்ந்து எடுத்துரைப்பதே அக அறிவியலாம். …தொடரும்.

1 கருத்து:

  1. புதிய நெடுந்தொடருக்கு நல்வரவு ஐயா. அக அறிவியல், புற அறிவியல் என்ற சொற்களை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். பல அரிய, நுட்பமான செய்திகளைத் தொரிந்துகொள்வதற்காக இந்த நெடுந்தொடரைத் தொடர்ந்து வாசிக்கக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு