திங்கள், 16 ஜூலை, 2018

திருக்குறள் -சிறப்புரை :938


திருக்குறள் -சிறப்புரை :938
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது. --- ௯௩௮
சூது, சேர்த்து வைத்த பொருளை அழிக்கும் பொருள் வேண்டிப் பொய் உரைக்கத் தூண்டும் மனத்தில் இரக்கமே இல்லாது ஒழிக்கும் இன்னபிற  பலவகையான துன்பங்களில் உழலச் செய்யும்.
“கழை சுளிபுகர் முகக் களிறு தேர் பரி
இழை தவழ் இள முலை மகளிர் ஈட்டிய
விழு நிதிக் குப்பைகள் வேலை சூழ் புவி
முழுவதும் தோற்றனன் முழவுத் தோளினான்.” –நைடதம்.
 சூதாடிய நளன், கரும்பை முறிக்கின்ற புள்ளி பொருந்திய முகத்தை உடைய யானையும் தேரினையும் குதிரையும் அழகிய அணிகலன்கள் தவழ்கின்ற  இள முலைகளை உடைய மாதர்களும் ஈட்டிய பெரும் பொருளாகிய செல்வத்தையும் கடல் சூழ்ந்த நிலப் பரப்பையும் மத்தளத்தை ஒத்த தோள்களை உடைய  மன்னன் அனைத்தையும் தோற்றுவிட்டான்.


1 கருத்து: