சனி, 14 ஜூலை, 2018

திருக்குறள் -சிறப்புரை :936


திருக்குறள் -சிறப்புரை :936
அகடாரார் அல்லல் உழப்பர் சூதென்னும்
முகடியால் மூடப்பட் டார். --- ௯௩௬
(அகடு ஆரார் )
சூது என்னும் முகடி (மூதேவி) யால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் வயிறு நிறைய உண்பதற்கு வழியின்றி, எந்நேரமும் துன்பத்தில் உழன்று தவிப்பர்.
“ உனது கணவனான தருமன், தானே சூதாடி அனைத்தையும் பணையமாக வைத்துத் தோற்றான். பின்னர்த் தன்னையும் தம்பியரையும் உன்னையும் (திரெளபதி) பணையமாக வைத்துத் தோற்றான். முறையாக நாங்கள் சூதில் வென்றோம் “ என்று கூறித் துச்சாதனன் செண்டு என்ற ஆயுதத்தினால் அவளது கூந்தலைப் பற்றி இழுத்துச் சென்றான்.
“வண்டார் குழலும் உடன் குலைய
       மானம் குலைய மனம் குலையக்
கொண்டார் இருப்பர் என்று நெறிக்
       கொண்டாள் அந்தோ கொடியாளே. –வில்லிபாரதம்.
 வண்டுகள் நிறைந்த கூந்தல் குலையவும் மானம் குலையவும் மனம் குலையவும் பாஞ்சாலி அவன் பின் சென்றாள். தன்னை மணந்த கணவர்கள் அங்கு உள்ளனர் என்ற துணிவில் அங்கே சென்றாள். அந்தோ.. கொடிய பாவம் செய்தவள்.

2 கருத்துகள்: